சரண் அடையாத ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு.... மற்ற 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
Recommended Video
சென்னை: ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தான் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது சரண் அடைய இயலாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் ராஜகோபல் தவிர 9 பேர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர்.
சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தன்னுடைய ஓட்டலில் பணியாற்றிய ஊழியரின் மகளான ஜீவஜோதியை மனைவியாக அடைய நினைத்தார். இதற்காக ஜிவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 2004ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் ஜூலை 7ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி நேற்று அவர் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்க வேண்டும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீதிமன்றங்கள் செயல்படவில்லை. இதனால் அவர் நேற்று சரண் அடையவில்லை
இதனிடையே 71 வயதாகும் ராஜகோபால் தனது உடல் நிலை பாதிக்கப்பபட்டள்ளதாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னால் உடனே சரணடைய இயலாது என்றும் காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று அவர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடையவில்லை. அதேநேரம் ராஜகோபாலை தவிர உள்பட 9 பேர் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதற்கிடையே சரண் அடைவதற்கு அவகாசம் கோரி ராஜகோபால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் நாளைக்கு விசாரணைக்கு எடுப்பதாக கூறினர். அப்போது ராஜகோபால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நாளைய உத்தரவுக்கு பின்னர் ராஜகோபால் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் முடிவு செய்வார்கள் என தெரிகிறது.