சசிகலாவின் அதிரடி முடிவு..கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட அனுமதிக்கமாட்டேன்..தொண்டர்களுக்கு தந்த உறுதி
சென்னை: எல்லாரும் நம் பிள்ளைகள்தான். புரட்சித் தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்க மாட்டார் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார். இவர் அதிமுகவை கைப்பற்ற முனைப்பு காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எதையும் செய்யவில்லை.
ஆனால் அமமுகவினருடனும் சில அதிமுக தொண்டர்களுடனும் அவர் தொலைபேசியில் பேசி வந்தார். அப்போது அதிமுகவை மீட்டெடுக்க தான் நிச்சயம் வருவேன் என அவர்களிடம் உறுதி அளித்தார். தொண்டர்களும் அதையே விரும்பினர்.

மூத்த நிர்வாகிகள்
தொண்டர்களிடம் பேசிய சசகிலா ஒவ்வொரு முறையும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை விமர்சனம் செய்தார். அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்து வந்தார். அதிமுக என்பது வெறும் கொங்கு மண்டலம் மட்டும் அல்ல என்று தெரிவித்திருந்தார். அது போல் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை தான் பதவி விலக சொல்லவில்லை என்றார்.

அதிமுக பொன் விழா
அவராகவேதான் பதவி விலகினார் என்றும் சசிகலா தெரிவித்தார். இந்த நிலையில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 16ஆம் தேதி அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சசிகலா நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் நாளிதழில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவர்களா அவர்களா
அதில் அவர் கூறுகையில் கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அஇஅதிமுக பிள்ளைகள்தான். புரட்சித் தலைவர் எப்போதும் கட்சி வித்தியாசமே பார்க்கமாட்டார். இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்கமாட்டார்.

அனுசரணை
அதனையெல்லாம் பார்த்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் நம் பிள்ளைகள்தான். அஇஅதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், தொண்டர்களிடம் ஒரு தாய் போல அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும்.

கவலைப்படாதீர்கள்
இப்போது அது போன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன். எல்லோரையும் சந்திக்கிறேன். கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுரையை பார்த்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications