கருமுட்டை உருவாவது எப்போது, மாதவிடாய் காலம் எது.. இனி வாட்ஸ் ஆப்பிலேயே தெரிந்து கொள்ளலாம்!
சென்னை: இனி வாட்ஸ் ஆப்பிலேயே மாதவிடாய் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதற்காக பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலங்களை நினைவில் வைத்துக் கொள்வது அவசியமானதொன்றாகும். இதன் மூலம் அடுத்த மாதவிடாய் எப்போது ஏற்படும், எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குளிக்கிறோம் என்பதையும் அறியலாம்.
ஏதாவது ஒரு மாதம் லேட்டானால் என்ன பிரச்சினை என்பதை அறியலாம். சிலருக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு பிரச்சினை என்று அர்த்தம்.
திருமணமானவர்கள்
திருமணமாகாதவர்களுக்கு ஓகே, திருமணமானவர்களுக்கு மாதவிடாய் வராவிட்டால் கர்ப்பமாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். இல்லாவிட்டால் ஹார்மோன் மாற்றங்களால் முன்னே பின்னே ஆகும் எனலாம். கரு உண்டாகி இருக்கும் பெண்கள் கடைசியாக மாதவிடாய் ஆன தேதியை சரியாக சொன்னால்தான் குழந்தை எப்போது பிறக்கும் என்பது கணிக்க முடியும்.
காலண்டர்
இதுதான் பெரிய பிரச்சினை, ஒரு காலண்டரில் குறித்து வைத்திருப்போம். ஆனால் அடுத்த மாதம் பார்த்தால் அந்த காலண்டரில் அந்த பேஜ் இருக்காது, போனில் நோட்டில் நோட் செய்யலாம் என நினைத்திருப்போம். அது மறந்திருக்கும். இந்த நிலையில்தான் இதற்கென ஒரு செயலி இருந்தால் எப்படியிருக்கும்.
சிரோனா
சிரோனா ஹைஜீன் என்ற நிறுவனத்துடன் வாட்ஸ் ஆப் இணைந்து பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ் ஆப்பில் கண்காணிக்க முடியும். 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸ் ஆப் கணக்கிற்கு ஹாய் என ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
மாதவிடாய் காலங்கள்
அவ்வாறு அனுப்பினாலும் தங்கள் மாதவிடாய் காலங்களை தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து பீரியட் டிராக்கர் எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதற்காக கடந்த மாதம் மாதவிடாய் காலத்தின் முதல் நாள் மற்றும் கடைசி நாள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். அந்த விவரங்களை கொடுத்த பிறகு உங்களின் மாதவிடாய் எப்போது ஏற்படும். கருமுட்டை உருவாக்கம் எப்போது, கருவுறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் நாட்கள், அடுத்த மாதவிடாய் காலம் உள்ளிட்டவை குறித்து விரிவாக வந்துவிடும். காலண்டரில் யார் கண்ணிலும் படாமல் எழுதி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.