தமிழக சட்டசபை தேர்தல்... ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு.. விரைவில் வரப்போகிறது.. செம்ம பரபரப்பு!
சென்னை: தமிழகத்தில் அடுத்த வார இறுதியில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் என இரண்டு அணிகள் சட்டசபை தேர்தலை சந்திக்க களம் இறங்கி உள்ளன. இதுதவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகியவையும் களத்தில் உள்ளன.
திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிவிட்டனர். இதன் எதிரொலியாக கடந்த ஜனவரி மாதம் பிறந்த உடனே தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர்.
கூட்டுறவு கடன்
மக்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை இருவரும் வெளியிட்டு வருகிறார்கள். மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்யப்போவதாகவும் , விவசாயிகளின் கூட்டுறவு கடனை ரத்து செய்யப்போவதாகவும் திமுக அறிவித்தது. அதிமுகவோ திடீர் திருப்பமாக விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து அதிரவைத்தது.
டெல்லியில் அறிவிக்கப்படுகிறது
அண்மையில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தின் தலைமைசெயலாளர், டிஜிபி உள்பட முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தல் தேதி டெல்லியில் இருந்து அறிவிக்கப்படும் என்றார். ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் வைத்திருப்பதையும், விடுமுறை நாட்கள், பள்ளி தேர்வுகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அடுத்த வாரம் தெரியும்
இந்நிலையில் முக்கியக் கட்சிகள் விருப்ப மனு விநியோகத் தேதியை அறிவித்து, தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தேர்தல் ஆணையமும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அடுத்த வார இறுதியில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மே 10ல் வாக்கு எண்ணிக்கை
ஏப்ரல் இறுதி வாரத்தில், ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்து மே 10-ஆம் தேதிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்படும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இன்னும் சில நாளில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். தொகுதிகள் நிலவரம் தெரியவரும் என்றும் நம்பலாம்.