பஸ் டிக்கெட் உயர வாய்ப்பு - “20 வருசத்துல 2 முறைதான்” - சூசகமாக சொன்ன போக்குவரத்து துறை!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. முன்னதாக, போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், 2001ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ்நாட்டில் 2 முறை மட்டுமே பேருந்து கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், விரைவில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படும் என்றும், அதற்கான சமிக்ஞையே இந்தக் குறிப்பு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்றுத்திறனாளி பயணிகளை அன்போடு நடத்துங்கள் - ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத் துறை ஆர்டர்
டீசல் விலை உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணங்கள் மற்ற மாநிலங்களில் உயர்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
டீசலின் கடுமையான விலை உயர்வால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதந்தோறும் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டது.
அமைச்சர் சிவசங்கர்
இந்நிலையில், சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்ட சிவசங்கர், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை அதிகரித்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படக் கூடாது என்ற முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
2 முறை மட்டுமே
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2001ஆம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டில் 2 முறை மட்டுமே பேருந்து கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2001க்குப் பிறகு 2011 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் கர்நாடகத்தில் 16 முறை, ஆந்திராவில் 8 முறை, கேரளாவில் 9 முறையும் பேருந்து கட்டணம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Recommended Video
உயர்த்த திட்டம்
கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த தகவல் வெளியாகியிருப்பதால், விரைவில் இங்கும் பேருந்து கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் எனப் பேச்சு கிளம்பியுள்ளது.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும், இன்று சட்டசபையில், அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனி இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இவற்றை ஈடுகட்டவும், டீசல் விலை உயர்வை சமாளிக்கவும், கனத்த மனதோடு பேருந்து கட்டண உயர்வு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.