தமிழக சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேஷ் டிரான்ஸ்பர்.. மீண்டும் வந்தார் 'அதிரடி நாயகன்' ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த பீலா ராஜேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, மறுபடியும், ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு முதல், தொடர்ந்து 8 ஆண்டுகள், தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
இந்த நிலையில், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ராதாகிருஷ்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக பீலா ராஜேஷ் பணி நியமனம் செய்யப்பட்டார்.
அந்த ஒரு பேட்டி.. எழுந்த பெரும் சர்ச்சை.. பீலா ராஜேஷ் அதிரடி பணியிடமாற்றத்தின் பரபர பின்னணி
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
எல்லாமே நல்லாகத்தான் போனது. கொரோனா நோய் பாதிப்பு பரவ ஆரம்பித்த பிறகு ஆரம்பத்தில் பீலா ராஜேஷின் பிரஸ் மீட் மிகுந்த வரவேற்பை பெற்றது. சிறப்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் என்று பாராட்டப்பட்டார். ஆனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் போகிறது.
அதிகார பகிர்வு
இந்த நிலையில்தான், சென்னை மாநகராட்சியின், கொரோனா கட்டுப்பாட்டு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் ராதாகிருஷ்ணன். பீலா ராஜேஷ் அதிகாரத்திற்குள் மற்றொரு அதிகார வளையம்போலத்தான் இந்த பதவி என்று சிலர் அப்போதே கூறினர். இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரிடர் ஸ்பெஷலிஸ்ட்
பேரிடர் காலங்களில் மிகச் சிறப்பாக பணியாற்ற கூடியவர் ராதாகிருஷ்ணன். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக, நாடு முழுக்க கவனம் ஈர்த்தவர். தமிழக சுகாதாரத்துறை எடுத்த பல முக்கிய முடிவுகளின் பின்னணியில் இருந்தவர். அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்.
மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நடவடிக்கை
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இன்னும் பல லட்சம் பேருக்கு தமிழகம் முழுக்க வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வு சுட்டிக் காட்டியது. இது போன்ற முக்கியமான காலகட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய ஒரு முயற்சியை அரசு தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டியது இப்போது கட்டாயமாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரித்துறைக்கு பீலா ராஜேஷ் மாற்றம்
இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர் பீலா ராஜேஷ் ஐஏஎஸ் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார். வருவாய் நிர்வாகத்தில் கமிஷனராக உள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். அவர் தற்போது வகிக்கும் பதவியையும் கூடுதலாக வகிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.