தமிழிசை, திருநாவுக்கரசர்.. குபுகுபுவென குவிந்த விஐபி வேட்பாளர்கள்.. களை கட்டிய வேட்பு மனு தாக்கல்
சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் பல்வேறு வேட்பாளர்கள் இன்று அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது.
நாளையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில் அதிமுக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் பலர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதேபோல் 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதிமுக கண்டுக்கலை.. செலவழிக்க பத்து காசு இல்லை.. கடனாளியாக மாறி வரும் தேமுதிக வேட்பாளர்கள்
தென் சென்னை வேட்பாளர்
தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை அடையாறில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அப்போது, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி வேட்பாளர்
பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அதிமுக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டிடுகிறார். இன்று மதியம் தூத்துக்குடி தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
டாக்டர் முதல், தமிழகத்தின் முன்னணி பெண் அரசியல் தலைவர் வரை.. இவர்தான் தமிழிசை!
வட சென்னை வேட்பாளர்
வடசென்னை மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ.கள் மாதவரம் சுதர்சனன்,சேகர்பாபு, ரங்கநாதன், தாயகம் கவி,உள்ளிட்டோர் வந்தனர்.
பொள்ளாச்சி வேட்பாளர்
பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் இன்று தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் எஸ் பி வேலுமணி, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டபேரவை துணை சபாநாயகர் ஜெயராமன் ஆகியோர் உடன் வந்தனர்.
கோவை வேட்பாளர்
கோவை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கு.ராசாமணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
திருநெல்வேலி வேட்பாளர்
திருநெல்வேலி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதிஷிடம் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.
திருச்சி வேட்பாளர்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். தேமுதிக வேட்பாளருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் குமார், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜய்யன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
தென்காசி-சிதம்பரம்
தென்காசி (தனி) மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் இதேபோல் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திருமாவளவன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சிவகங்கை-கோவை
சிவகங்கை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இதேபோல் கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் பல்வேறு கட்சியினர் தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.