தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ஜன. 31 வரை நீட்டிப்பு.. ஜன. 16ல் முழு ஊரடங்கு! கட்டுப்பாடுகள் என்னென்ன?
சென்னை: தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், வரும் ஜன.31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்திற்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக மீண்டும் வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
முழு ஊரடங்கு: அப்படியே சைக்கிளை எடுத்து.. 5 கி.மீ ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.. வியந்து போன மக்கள்!
கொரோனா பாதிப்பு
குறிப்பாக மாநிலத்தில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் 14 ஆயிரத்தை நெருங்குகிறது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதையடுத்து கொரோனா நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் பல்வேறு சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழா சமயத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க இதுபோன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜன. 31 வரை நீட்டிப்பு
அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஜன.31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
கூடுதல் கட்டுப்பாடுகள்
மேலும், 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை 16-01-2022 அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதேபோல பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள்
இதுதவிர ஊரடங்கு காலத்தில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தமிழக அரசின் அறிவிப்பில், "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டு தவணை தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும். கடைகளின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமிநாசினிகள் கட்டாயம் வைக்கப்படுவது உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிவோர் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிவதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.. வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிவோர், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதியைத் தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்கவும் வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு மண்டலம்
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறிதல், தொற்று நோய் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து நிலையான வழிகாட்டுதலின்படி நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும்.
எதற்கு அனுமதி
நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், இந்த பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் தவிர இதர செயல்பாடுகள் இல்லை. நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக நோய் தொற்று பரவுவதைத் தடுக்க கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
Recommended Video
நடவடிக்கை
கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா அதிகரித்து வந்தாலும் உரியச் சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இருப்பினும் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.