10 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழரை நாடற்றவர்களாக இலங்கை பிரகடனம் செய்த வரலாற்றை மறக்க முடியுமா?
சென்னை: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்கும் நாம் 1960களில் 10 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களை நாடற்றவர்களாக இலங்கை பிரகடனம் செய்து இந்தியாவுக்கே திருப்பி அனுப்பிய கொடூர வரலாற்றை மறக்க முடியாதுதான்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு முனைப்பாக இருக்கிறது. இந்த நாடுகளில் முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர் அனுபவித்த துயரங்களைவிட பல மடங்கு வேதனைகளை இலங்கையிலும் மியான்மரிலும் அனுபவித்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள்.

இந்திய வம்சாவளி தமிழர்கள்
1948-ம் ஆண்டு இலங்கை அரசானது குடியுரிமை சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அதில் 2 தலைமுறைகளுக்கு முன் இலங்கையில் பிறந்தவர்கள்தான் அந்நாட்டு குடிமக்கள் என வரையறுக்கப்பட்டது. 2 தலைமுறைகளுக்கும் மேலாக இலங்கையின் மலையகப் பகுதிகளில் தோட்ட தொழிலாளர்களாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லாமல் போனது.

10 லட்சம் தமிழர்கள் நாடற்றவர்கள்
இதனால் 10 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். 1949-ம் ஆண்டு இன்னொரு சட்டத்தின் மூலம் இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. இந்த பிரச்சனை குறித்து அப்போதைய மத்திய அரசு மிகப் பெரிய அக்கறையை வெளிப்படுத்தவில்லை. இலங்கையுடனான நேரு- கொத்தலாவலை ஒப்பந்தங்கள் பயனற்றதாகத்தான் இருந்தன. பின்னர் 1964-ல் சாஸ்திரி- சிறிமாவோ ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

அகதிகளாக தமிழர்கள்
அதில் சுமார் 3 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களை மட்டும் இலங்கை ஏற்றுக் கொண்டது. எஞ்சிய 7 லட்சம் தமிழர்களும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இந்த தமிழர்களுக்கான வாழ்வாதாரங்களுக்கு எந்த அரசும் எதுவும் செய்யாமல் போனதால் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிப் போனது. முகாம்கள் தங்க வைக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட பேரவலத்தை எதிர்கொண்டே வாழ்கின்றனர்.

மியான்மர் தமிழர்கள்
அதேபோல் இன்றைய மியான்மரான அன்றைய பர்மாவில் 1960களில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. அங்கிருந்து சுமார் 5 லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கே விரட்டியடிக்கப்பட்டனர். பர்மா தமிழர்களுக்கு என காலனிகளை உருவாக்கிக் கொடுத்ததுடன் சரி.. அவர்களது வாழ்வாதாரத்துக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் அப்போதைய அரசுகள் மேற்கொள்ளவில்லை.

மோரே துயரம்
இதனால் மீண்டும் பர்மாவுக்கே திரும்பிப் போகும் நோக்கத்துடன் காடு மலைகளைக் கடந்து பர்மா எல்லையான மணிப்பூரின் மோரேவில் தஞ்சம் அடைந்தனர் தமிழர்கள். 1980களில் உள்ளூர் இனக்குழுக்களிடையேயான மோதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மோரேவில் படுகொலை செய்யப்பட மீண்டும் தமிழ்நாட்டுக்கே தஞ்சமடைந்தனர். எஞ்சியவர்கள் சில ஆயிரங்களில் இன்னமும் மோரேவில் வாழ்கின்றனர்.

ஈழத் தமிழ் அகதிகள்
இத்தனை லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக தாய்நிலத்துக்கு திரும்பிய போதும் ஏறெடுத்துப் பார்த்து அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கு அரசுகள் கை கொடுக்கவில்லை. அதேபோல் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களும் பல லட்சக்கணக்கில் அகதிகளாக தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

இந்திய குடியுரிமை
இன்றளவும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக முகாம்கள் எனும் திறந்தவெளி சிறைகளில் எதிர்கொண்டிருக்கும் அவலம் சொல்லி மாளாதது. இவர்களுக்கு இந்திய குடியுரிமையாவது கொடுங்கள் என்பதுதான் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications