நளினியின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு.. 10வது முறையாக பரோல் நீட்டிப்பு.. விடுதலை எப்போது?
சென்னை: 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினிக்கு 10வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

டிசம்பரில் முதல் பரோல்
இதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வாங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உள்ள வீட்டில் தங்கி தனது தாயாரை கவனித்து வருகிறார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவர் தங்கி உள்ள வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

10வது முறையாக பரோல் நீட்டிப்பு
தொடர்ந்து ஒன்பது முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 25ஆம் தேதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் தாயின் உடல் நிலையை காரணம் காட்டி நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நளினிக்கு 10ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ளவர்கள் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் நளினி, ரவிசந்திரன் உள்ளிட்ட 5 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விடுதலை எப்போது?
இந்த வழக்கில் தமிழநாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், இந்த வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளது. இதனால் அவர் தற்போது அவரது உறவினர் வீட்டில் உள்ளார். அதேபோல நளினிக்கும் கடந்த 27.12.2021 முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications