தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. வாக்குப் பதிவு நிறைவு.. 70 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தலில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. தோராயமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
27 மாவட்டங்களில் 46, 639 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
மொத்தம் 91, 975 பதவிகளில் 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 2-ஆம் கட்ட தேர்தலில் மீதமுள்ள 46,639 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
158 ஊராட்சி ஒன்றியங்களில் 38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4,924 பஞ்சாயத்து தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த இரு கட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.