தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா.. மக்கள் அச்சப்பட வேண்டாம்.. ஏன் தெரியுமா? விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதன் மூலம், தமிழகத்தின் மொத்த பாதிப்பு 6000த்தை கடந்துள்ளது.
இன்று மாலை 6 மணியளவில் வீடியோ மூலம், நிருபர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று, ஆண்கள் 405, பெண்கள் 195 என மொத்தம், 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 580, முந்தைய நாள் பாதிப்பு 771 என்ற அளவுக்கு இருந்தது.
சென்னையில்.. பிரபல பெண் டிவி தொகுப்பாளருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி
நாட்டிலேயே அதிகம்
இன்று காலை நிலவரப்படி, 2 லட்சத்துக்கு 16 ஆயிரத்து 416 பேருக்கு பரிசோதனை நடத்தியுள்ளோம். இந்தியாவிலேயே இதுதான் அதிகம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரா நம்மை விட குறைவு. அதிக பரிசோதனைகள் இருப்பதால், நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. எனவே அச்சப்பட வேண்டாம். 78 வயது ஆண் சென்னையில் இன்று உயிரிழந்தார். 56 வயதுள்ள சென்னை நபரும் உயிரிழந்தார். இருவருக்கும் வேறு சில உடல் பிரச்சினைகள் இருந்தன. திருநெல்வேலியில், 83 வயது நபர் இன்று உயிரிழந்தார். இவர் மருத்துவமனை வரும் முன்பே மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.
குறைவான இறப்பு விகிதம்
எனவே, தமிழகத்தில் இன்று மூன்று பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் மொத்தம் பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை 6009 என்ற அளவுக்கு உள்ளது. இந்திய அளவில், கொரோனா நோயால் உயிரிழப்போர் சதவீதம் தமிழகத்தில் 0.68 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது.
பாதுகாப்பு
தமிழகத்தில் இன்று 600 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அதில், சென்னையில் மட்டும், இன்று 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதில் மூத்தவர்கள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், டயாலிசிஸ் பெறுவோர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோய் இருப்போர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை, பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும்.
முதியவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
முதல்வரின் சார்பாகவும், அரசின் சார்பாகவும் இதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். வயதில் மூத்தவர்கள் முக கவசம் அணிந்து முழுமையான பாதுகாப்புடன் பராமரித்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சமுதாயத்தின் ஒத்துழைப்பு ஆகிய இரண்டும் இந்த பெருந்தொற்றை ஒழிப்பதற்கு தேவைப்படும். நோய் பரவலை கட்டுக்குள் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.