தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு டிசம்பரில் போட்டித் தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அப்படி பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கக் கோரி ஏராளமான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு, விரைவில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அட்டவணையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கணினி கணினி வழித் தேர்விற்கு, தேர்வர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சித் தேர்வு நடத்தவும் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசாணை எண் 149-ஐ நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.