டான்ஸ் கத்துக்க வந்த அந்த 4 பேர் எங்கே?.. சந்தேகம் கிளப்பும் டான்ஸர் ரமேஷ் உறவினர்கள்!
டான்ஸர் ரமேஷ் இறப்பில் அந்த 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: டான்ஸர் ரமேஷ் இறப்புக்கு முன்பு அவரை பார்க்க வந்த 4 பேரை இறப்புக்கு பின்னர் காணவில்லை. எனவே அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ரமேஷ் மனைவியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் டான்ஸர் ரமேஷ். சிறு வயதில் இருந்தே சினிமாவை பார்த்து நடனம் ஆடி வருவார். இதனால் இவருக்கு நடனம் மீது கொள்ளை பிரியம்.
டைம் கிடைக்கும் போதெல்லாம் நடனமாடுவதையே வழக்கமாக கொண்டிருப்பார். மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவா உள்ளிட்டோர் போல் கைதேர்ந்த நடனத்தை கையில் எடுத்தார் ரமேஷ். இவரது நடனத்தால் ஆச்சரியமடைந்த அந்த பகுதி இளைஞர்கள் அவரது நடனத்தை வீடியோ எடுத்து ரீல்ஸ், டிக்டாக் செயலிகளில் பதிவிட்டனர்.
என் கணவர் மரணம் தற்கொலை அல்ல.. இறப்புக்கு யார் காரணம்? டான்ஸர் ரமேஷின் மனைவி பரபரப்பு தகவல்
டான்ஸர் ரமேஷ்
இதன் மூலம் டான்ஸர் ரமேஷ் என பெயர் பெற்றார். இந்த நடன வீடியோக்கள் தனியார் தொலைகாட்சி சேனலின் கண்களில் பட்டு அவரை நடனமாட அழைத்தனர். ரமேஷின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமேயானால் அவர் 13 வயதில் சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 25 வயதில் ஜெனிபர், 22 வயதில் சானோபர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
42 வயதான டான்ஸர் ரமேஷ்
இந்த நிலையில் 42 வயதான டான்ஸர் ரமேஷுக்கு மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த இன்பவள்ளியுடன் தொடர்பு ஏற்பட்டு அவ்வப்போது அவருடன் தனியே வாழ்ந்து வந்தார். இந்த விஷயம் சித்ராவுக்கு தெரியவந்து தனது உறவினர்களுடன் சென்று இன்பவள்ளியை தாக்கியதாக தெரிகிறது. எனினும் இவர்கள் இருவரது கள்ளக்காதல் தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் இன்பவள்ளியை ரமேஷ் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
கே.பி. பார்க் பகுதி
இன்பவள்ளி புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பார்க் பகுதியில் வசித்து வந்தார். இந்த அபார்ட்மென்ட் பகுதியிலிருந்துதான் ரமேஷ் 10 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக இன்பவள்ளி தரப்பு கூறுகிறது. ஆனால் இதை சித்ரா உள்ளிட்டோர் ஏற்க மறுக்கிறார்கள். இன்பவள்ளிக்கு நிறைய ரவுடிகளுடன் தொடர்பிருப்பதாக கூறும் சித்ரா, ஏற்கெனவே தனது கணவரை ஒரு முறை இன்பவள்ளி ரவுடிகள் மூலம் கடுமையாக தாக்கியிருந்தார்.
இன்பவள்ளியிடம் பயம்
அது முதல் இன்பவள்ளியை கண்டாலே ரமேஷ் பயப்படுவார். அவரது வீட்டிற்கு சென்றாலே நிறைய குடிக்க வைப்பார். சம்பவம் குறித்து சித்ராவின் உறவினர்கள் கூறுகையில், ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக இன்பவள்ளி எங்களுக்கு போன் செய்தார். நாங்கள் நம்பவில்லை, போட்டோ எடுத்து அனுப்பு என்றோம். அது போல் அனுப்பினார். இதையடுத்து பதறி அடித்துக் கொண்டு அவரை பார்க்க ஓடினோம்.
4 பேர் எங்கே
அங்கு விசாரித்த போது ரமேஷிடம் நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக யாரோ 4 பேர் அவரை தேடி கேபி பார்க் பகுதிக்கு சென்றனராம். ஆனால் ரமேஷ் கீழே விழுந்து இறந்தவுடன் அந்த 4 பேரை காணவில்லை. எனவே அவர்களுக்கும் ரமேஷ் இறப்பிற்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகிப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த நிலையில் டான்ஸர் ரமேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது தலை பகுதி, உடல் பகுதி ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வந்தால் ரமேஷ் தானாக விழுந்தாரா இல்லை யாராவது தள்ளிவிட்டார்களா என்பது தெரியவரும்.