இன்று மாலையுடன் நிறைவடைந்தது பிரச்சாரம்.. நாளை மறுநாள், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2ம் கட்ட தேர்தல்
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன், நிறைவடைந்துள்ளது.
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும், 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. புதிதாக சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் அந்த மாவட்டங்கள், அவை பிரிந்து சென்ற மாவட்டங்கள் என மொத்தம் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.
ஏற்கனவே 27ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஒரு சில பிரச்சினைகளை தவிர பெரும்பாலும் சுமூகமாகவே தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் வரும் 30ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர்கள், தி.மு.க. பிரமுகர்கள் ஈடுபட்டனர்.
இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
இரண்டாம் கட்ட தேர்தலில் 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
30ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப்பதிவுக்காக 25,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகும். வாக்குப்பதிவுகளை வீடியோவில் பதிவு செய்யவும், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்.