கட்டாய தாலி கட்டுனா பொண்டாட்டியாம்.. விஜய் டிவி சீரியலால் சர்ச்சை.. போலீஸ் எஸ்.பி. வைத்த "குட்டு"
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பெயரிலான சீரியல் ப்ரோமோ (Thendral vanthu ennai thodum serial) சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.
1990-களில், அல்லது அதற்கு முன்பாக வெளியான தமிழ் திரைப்படங்களில் எப்படி பிற்போக்குத்தனம் இருந்ததோ, அதை மீண்டும் சீரியல்கள் வழியாக வீடுகளுக்குள் நுழைக்க பார்க்கிறார்கள் என்று பெண்ணியவாதிகள் மட்டுமின்றி பரவலாக அனைத்து தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த விளம்பர வீடியோவில் காட்டப்படும் காட்சிகள், சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று, திருவள்ளூர் போலீஸ் எஸ்பி வருண் குமார் ஐபிஎஸ், தனது கருத்தை பதிவு செய்துள்ளது இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
பெகாசஸ்: எந்த விசாரணையும் கிடையாது... ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அஜய் குமார் பொளேர் ரிப்ளை
தென்றல் வந்து என்னைத் தொடும்
தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பெயரில் ஒரு சீரியல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக ஒரு ப்ரமோ வீடியோ அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. கதாநாயகியாக நடித்திருப்பவர் , அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு வந்திருப்பது போலவும், அவர் ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது . தமிழ் பாரம்பரியத்தை மதிக்கும் பெண் என்று அவர் தன்னைப் பற்றி சக பெண்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். அதுவரை எந்த பிரச்சனையும் இல்லை .
வினோத் பாபுதான் கதாநாயகன்
ஆனால் அந்த கோவிலில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வது போலவும், அதை கதாநாயகன் கதாபாத்திரம் வந்து தட்டி கேட்டு தாலியை பறிப்பது போலவும் காட்சி இருக்கிறது. ஆதித்யா டிவி மூலம் ஃபேமஸ் ஆனாரே அந்த வினோத் பாபுதான் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகன் இவ்வாறு தாலியை பறிப்பதை பார்த்து கோபமடையும் கதாநாயகி.. இது என்ன காட்டுமிராண்டித்தனம்.. அம்மன் சாட்சியாக திருமணம் நடந்து இருக்கிறது.. அதை தடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்.
வலுக்கட்டாயமாக தாலி கட்டும் "ஹீரோ"
"ஒரு மஞ்சள் கயிற்றை கட்டினால் அதன் பெயர் கல்யாணமா.." என்று கதாநாயகன் கேட்டதோடு விடாமல் , அம்மன் சிலையில் உள்ள ஒரு தாலியை எடுத்து கதாநாயகி கழுத்தில் கட்டி விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு விட்டு, "இப்போ நான் உனக்கு தாலி கட்டி பொட்டும் வைத்து விட்டேன்.. நீ எனக்கு மனைவியா.." என்று கேள்வி எழுப்பி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதன் பிறகுதான் பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. கதாநாயகியாக நடித்த பெண் அந்த நபர் பின்னால் நடந்து செல்வது போல அந்த வீடியோ காட்சி முடிவடைகிறது.
கட்டுப்பெட்டித் தனம்
பலாத்காரம் செய்தவருக்கே பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.. ஆடை இல்லாமல் பெண்ணை பார்த்து விட்டால் அந்த ஆணுக்கு தான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.. என்பது போன்ற பல காட்சிகள் தமிழ் திரைப்படங்களில் முன்பெல்லாம் இடம்பெற்றிருந்தன. கடந்த 10 அல்லது 15 வருடங்களாக இந்தப் போக்கு மாறி இருக்கிறது. பலாத்காரம் செய்தால் அவருக்கு போலீசில் தண்டனை பெற்று தர வேண்டுமே தவிர, தாலி கட்டிக் கொள்ளக்கூடாது என்ற எதார்த்த நிலையை சினிமாவுக்கு வந்திருக்கிறது. ஆனால் பெண்கள் பரவலாக பார்க்கக்கூடிய நெடுந்தொடர்களில் இதுபோன்ற 20 வருடங்களுக்கு முந்தைய சித்தரிப்புகளை காட்சிகளாக வைத்து காண்பித்தால் அது அவர்கள் மனதில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவேதான் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
திருவள்ளூர் போலீஸ் எஸ்பி விளக்கம்
இதை கவனித்த திருவள்ளூர் மாவட்ட, போலீஸ் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் அந்த டுவிட்டர் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டுள்ளார். அதில், இதுபோன்ற செயல்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 இன் கீழ், பெண்களை தொல்லை செய்தால்.. அதாவது கல்வி நிலையங்கள், கோவில்கள், பஸ் நிலையம், ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பூங்கா , கடற்கரை, திருவிழா நடைபெறும் இடங்கள் உட்பட எந்த ஒரு இடத்தில் வைத்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தாலும் அந்த நபருக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்கள் வரவேற்பு
பெண்ணை பலவந்தப் படுத்தி தாலி கட்டும் இந்த காட்சி, சட்டப்படி தவறானது என்பதை மாவட்ட போலீஸ் எஸ்பி பளிச் என்று தெரிவித்துள்ளார். இதை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர். நிஜமாகவே இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், இது போன்ற பெண்களுக்கு எதிரான காட்சிகளை படமாக்க எந்த ஒரு இயக்குனருக்கும் இனிமேல் துணிச்சல் வராது என்கிறார்கள் மக்கள்.