புரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி!
சென்னை: புரேவி புயலுக்கு பிறகு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் டிசம்பர் 7-ஆம் தேதி நிலவரப்படி புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே செல்வது போல் சாட்டிலைட் லைவ் வீடியோ காண்பிக்கிறது. எனினும் அந்த காற்றழுத்தம் எங்கே செல்கிறது என அறிய இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழையில் முதல் முறையாக வங்கக் கடலில் ஒரு புயல் உருவானது அதற்கு நிவர் என பெயரிடப்பட்டது.
இந்த புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னைக்கு போதுமான மழையை கொடுத்துவிட்டு சென்றது.
24 மணி நேரம்
இந்த மழையால் சென்னையில் உள்ள நீராதார ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தோடுகின்றன. சராசரிக்கு அதிகமாகவே சென்னைக்கு நிவர் மழையை கொடுத்துவிட்டது. இந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கரையை கடந்த நிலையில் தற்போது இன்னும் 24 மணி நேரத்தில் மற்றொரு புயல் உருவாகவுள்ளது.
புயல்
இதற்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் எங்கு கரையை கடக்கும் என்பது தெரியவில்லை. நாகை அருகே கரையை கடப்பது போன்று இருந்தது. எனவே மழையே இல்லாத டெல்டா மாவட்ட மக்களுக்கு இதன் மூலம் மழை வரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிவரை போல புரேவியும் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சென்னை- புதுவை
இந்த நிலையில் புரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம் அந்தமான் அருகே உருவாகிறது. இந்த காற்றழுத்தம் புயலாக மாறுமா என தெரியவில்லை. எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்றும் உறுதிப்பட தெரியவில்லை. ஆனால் தனியார் செயலியை பார்க்கும் போது டிசம்பர் 7-ஆம் தேதி வாக்கில் சென்னை- புதுவை இடையே சுழன்றடித்துக் கொண்டு வருகிறது.
காற்றழுத்தம்
இதனால் மீண்டும் சென்னைக்கு இந்த காற்றழுத்தம் வருகிறதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்தமாக இருந்தால் மழையை கொடுக்கும். ஏற்கெனவே நிவரால் பெய்த மழையால் சென்னையில் முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவே இல்லை. இந்த நிலையில் மேலும் மழை பெய்தால் என்னவாவது? ஒருவேளை புயலாக மாறினால் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டால் என்ன செய்வது? எனவே எங்கு மழை இல்லையோ அந்த இடத்திற்கு இந்த காற்றழுத்தம் சென்று மக்களுக்கு மழையை வாரி கொடுக்க வேண்டும்.