பாஜக கேட்கும் அந்த 5 மாநகராட்சிகள்; அமைதிகாக்கும் அதிமுக; அடுத்தது என்ன?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சீட் பங்கீடு தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது பாஜக தலைமை.
அந்த வகையில் 5 மாநகராட்சிகள் வரை கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் இருந்து கேட்டுப் பெறும் திட்டத்தில் இருக்கிறதாம் பாஜக.
கோவை, திருப்பூர், கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், கரூர், வேலூர் ஆகிய 7 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகளில் களமிறங்க பாஜக காய் நகர்த்தி வருவது போல் தெரிகிறது.
திருமாவளவன் 'நாற்காலி சர்ச்சை..' சமத்துவம் பேசியது பொய்யா? சீண்டும் பாஜக.. விசிக தொண்டர்கள் பதிலடி
நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு மழை ஓய்ந்தவுடன் வெளியாகக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் கால அட்டவனை தயார் நிலையில் இருப்பதாகவும் மழை காரணமாக அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் இந்த வாரம் இறுதிக்குள் இது தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சீட் பங்கீடு
இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயார் நிலையில் உள்ளன. திமுக -காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக-பாஜக, மற்றொரு அணியாகவும் கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றன. பாமக, தேமுதிக, ஆகிய இரண்டு முக்கியக் கட்சிகளும் தனித்து களம் காணவிருக்கின்றன. இதனால் அந்தக் கட்சிகளின் தலைமை சீட் பங்கீடு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
5 மாநகராட்சிகள்
ஆனால் அதேநேரம் காங்கிரசும், பாஜகவும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் எதிர்பார்த்த சீட்களை பெறுவதற்குள் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனிடையே கோவை, திருப்பூர், கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், கரூர், வேலூர் ஆகிய 7 மாநகராட்சிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதும் பாஜக தலைமை இது தொடர்பாக அதிமுக முகாமிற்கு தூதும் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட 7 மாநகராட்சிகளில் குறைந்தது 5 மாநகராட்சிகளையாவது கேட்டுப்பெற்று போட்டியிட விரும்புகிறதாம் பாஜக.
எண்ணிக்கை
ஏற்கனவே உட்கட்சி களேபரங்கள் காரணமாக பல பஞ்சாயத்துக்கள் அதிமுகவில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், பாஜகவின் இந்த விருப்பம் குறித்து யாரும் கலந்துகூட பேசவில்லையாம். தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு 3 மாநகராட்சிகளை மட்டுமே அதிமுக தலைமை ஒதுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே டெல்லி மேலிடத்தில் இருந்து பேச்சு நடத்தப்பட்டால் இந்த எண்ணிக்கையை அதிமுக சற்று உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.