எதிர்க்கட்சிகளை நசுக்க முயற்சி...எதற்கும் அஞ்சமாட்டோம், சட்டப்படி எதிர்கொள்வோம் - ஓபிஎஸ்
நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி நாடுவோம். அனைத்தும் பொய் வழக்கு என்பது மக்களுக்கு தெரியும் என்று சட்டசபை எதிர்கட்சித்துணைத்தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: எங்களை அச்சுறுத்த ஜனநாயக விரோத நடவடிக்கையில் திமுக ஈடுபடுகிறது. எப்படியாவது பொய் வழக்கு போட்டு எங்களை நசுக்க வேண்டும் என்று செயல்படுகிறார் ஸ்டாலின் என்று எதிர்கட்சித்துணைத்தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி நாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று சட்டசபைக் கூடியதும், கொடநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதிமுகவினர் மீது தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாக அவர் கூறினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு சட்டசபையில் முழக்கமிட்டனர்.
கொடநாடு விவகாரத்தில் வேண்டும் என்றே பெரிதாக்கப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவினர்,பொய் வழக்கு போடாதே, தமிழக மக்களை வஞ்சிக்காதே என்று முழக்கமிட்டனர். உடனே சபாநாயர் குறுக்கிட்டு என்னிடம் அனுமதி பெறாமல் நேரமில்லா நேரத்தில் பேசுவது போல் பேசுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என்றார். என்றாலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசினார். அவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அவர்கள் முழக்கமிடவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று முழக்கமிட்டதோடு, கையில் கொண்டு வந்திருந்த பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்ற வாசகம் அடங்கிய அட்டைகளையும் காண்பித்தனர்.
அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சபாநாயகர் பலமுறை கூறினார். என்றாலும் அவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினார்கள். இருப்பினும் சபாநாயகர் எடப்படி பழனிசாமி பேச அனுமதி வழங்கவில்லை. அவரது பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். அப்போது சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது. அரசுக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை, விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்படி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கொடநாடு தொடர்பாக என்ன நோக்கத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கொடாநாடு வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ச் அணிந்து வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், பொய் வழக்கு போடாதே என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவைக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் 'போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே'... என்று திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு. இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களும் பாஜக உறுப்பினர்களும் கலைவாணர் அரங்கத்தின் வாசலில் சில நிமிடங்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஜனநாயகத்தில் எதிர்கட்சியினரை தனது அதிகார பலத்தால் எதிர்கட்சியினரை நசுக்க வேண்டும் என்று தவறான கொள்கையை திமுக கையில் எடுத்துள்ளது. துரிதமாகப் பொய் வழக்குகளைப் போட்டு அதிமுகவினரை செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர்.
எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு தராத போக்கு தொடர்கிறது. ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய அவர், திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.
எதிர்க்கட்சிகளை நசுக்க ஆளுங்கட்சி முயற்சி செய்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளனர். ஆளும் அரசு மக்களை திசை முயற்சி செய்கிறது. அனைத்தும் பொய் வழக்கு என்பது மக்களுக்கு தெரியும். இன்றும், நாளையும் சட்டமன்ற கூட்டத் தொடரை அதிமுக புறக்கணிக்கும். அராஜக திமுக அரசு எடுத்திருக்கும் வன்முறையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு இருக்கும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எதிர்கட்சித்தலைவர் மீதே பொய் வழக்கு போட முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்.
கொடநாடு வழக்கின் பின்னணி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலகட்டங்களிலும் அவ்வப்போது இந்த எஸ்டேட் சென்று ஓய்வு எடுப்பது வழக்கம்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி, கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர்அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்ததால், காவல்துறையினர் அவரை தேடினர்.
இந்த நிலையில், 2017ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். கொலை, கொள்ளை அடுத்தடுத்து மர்மமான முறையில் ஏற்பட்ட மரணங்களால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் இருந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 8 பேர் ஜாமீனில் உள்ளனர். ஊட்டியில் தங்கியுள்ள சயானிடம் நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சயானிடம் நீலகிரி போலீஸ் எஸ்.பி. ஆஷிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், விசாரணை அதிகாரியான கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். விசாரணை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதால் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் இன்று சட்டசபையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கிறது என்று பொடி வைத்து கிலியை கிளப்பியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications