தீர்ப்பை மீறலாமா? டிபிஐ வளாகத்தில் திமுக மூத்த தலைவர் அன்பழகனுக்கு சிலை அமைக்க பாஜக கடும் எதிர்ப்பு!
சென்னை : தமிழக அரசில் நிதித்துறை, கல்வித்துறை என முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றிய மறைந்த பேராசிரியர் க.அன்பழகனுக்கு பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் சிலை அமைப்பதை திமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
திமுக பொதுச் செயலாளராகவும், தமிழக அரசில் நிதித்துறை, கல்வித்துறை என முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றிய மறைந்த பேராசிரியர் க.அன்பழகனுக்கு டிபிஐ வளாகத்தில் சிலை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்நிலையில், அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் அவர்களின் சிலையை நிறுவும் முயற்சியினை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாஜக நாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு 'தலைவர்களின் பூங்கா' ஒன்றை உருவாக்கி அங்கே தலைவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
10 நாளில் 12 பேர்.. சவுதியில் மீண்டும் தலைதூக்கிய தலை துண்டிப்பு மரண தண்டனை.. வெளியான ஷாக் தகவல்
அன்பழகன் சிலை
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் சாலையில், டிபிஐ வளாகத்தில் முன்னாள் கல்வி அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான அன்பழகனுக்கு சிலை நிறுவும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ''2013 உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் பொது இடங்களில் எந்த சிலை நிறுவவும் தமிழகம் அனுமதியளிக்கவில்லை'' என்று கடந்த 23.1.2022 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றில் தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக அரசின் சார்பில் வாக்குமூலத்தை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பு
சாலைகளிலோ, நடைபாதைகளிலோ, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பொது இடங்களிலோ இனி சிலைகள் வைப்பதற்கு மாநிலங்கள் அனுமதியளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஜனவரி 18, 2013 அன்று அளித்த தீர்ப்பின்படி, அரசு அலுவலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இடங்கள் என்பதை உணர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கல்வித்துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் சிலையை நிறுவும் முயற்சியினை தமிழக அரசு கைவிட வேண்டும்.
அனுமதி கூடாது
மேலும் அக்டோபர் 7,2021 அன்று சென்னை உயர் நீதிமன்றதின் நீதியரசர் எம்.சுப்பிரமணியன் வழங்கிய தீர்ப்பில், பொது இடங்கள், சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் இனி சிலைகள் அமைக்க அனுமதியளிக்கக்கூடாது என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டதை அரசு மறந்துவிடக்கூடாது. இனி அரசு அலவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சிலைகள் வைப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். மேலும், அதே தீர்ப்பில், பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு தலைவர்களின் பூங்கா ஒன்றை உருவாக்கி அங்கே தலைவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்ற உத்தரவையும் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
அம்மா வளாகம் பெயர் மாற்றம்
முன்னதாக, நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகம் அம்மா வளாகம் என இயங்கி வந்த நிலையில், பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. அதற்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் அன்பழகனுக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதேசமயம் 'அம்மா வளாகம்' என்று பெயரை மாற்றி 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என்று வைப்பது நியாயமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல என தெரிவித்தது அதிமுக. எனினும், தமிழக அரசு பெயரை மாற்றியது குறிப்பிடத்தக்கது.