சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ரவி.. அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்!
இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ரவி.
சென்னை : நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தற்போது முப்படை மற்றும் தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்ட சீருடை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு வருகிறார்.
மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றுவார்கள். குடியரசு தினத்தன்று மாநில ஆளுநர்கள் கொடி ஏற்றுவார்கள்.
அந்த வகையில் இன்று இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த ஆளுநர் ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
74வது குடியரசு தினம்: டெல்லியில் கொடியேற்றுகிறார் ஜனாதிபதி.. சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர்!
உழைப்பாளர் சிலை அருகே
இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில், மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பகுதியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்போது அங்கு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறுவதால் இடம் மாற்றப்பட்டுள்ளது.
கொடியேற்றிய ஆளுநர்
உழைப்பாளர் சிலை பகுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக, காலை 7.50 மணிக்கு முதலில் காவல்துறை வாகன அணிவகுப்புடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ராணுவத்தினரின் வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்விடத்துக்கு வந்தார். ஆளுநர் மற்றும் திருமதி ஆளுநரை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அதைத்தொடர்ந்து, ஆளுநர் மற்றும் முதல்வருக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிமுகம் செய்து வைத்தார்.
விருதுகள்
காலை 8 மணிக்கு ஆளுநர் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றியதும், ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்படும். இதையடுத்து, முப்படையினர், கடலோர காவல்படையினர், பள்ளி மாணவர்கள், பேண்டு வாத்தியக்குழு உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெறும். அதேபோல், கடலோர காவல்படை, கடற்படை, விமானப் படையின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். பின்னர், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது. காந்தியடிகள் காவலர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான விருது ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். அதைத் தொடர்ந்து, அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெறும்.
கலை நிகழ்ச்சிகள் - பாதுகாப்பு
மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசம் பெருமிதம் கொள்ளும்
குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் தனது ட்விட்டர் பதிவில், "இந்நாளில் நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவர்களின் தியாகங்களுக்காக தேசம் எப்போதும் பெருமிதம் கொள்ளும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.