ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்யும் அறிவிப்பை இன்று வெளியிடுகிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஏற்கனவே தூக்கு தண்டனை கைதிகளாக இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரும் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த 7 பேரையும் தமிழக அரசு தமக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யலாம் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தற்காலிக சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் கு.பிச்சாண்டி... நாளை மறுநாள் முறைப்படி சபாநாயகர் தேர்வு..!
இதனடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சியில் 7 தமிழரை விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பரிந்துரையின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவும் எடுக்காமல் இரண்டரை ஆண்டுகாலம் இழுத்தடிப்பு செய்து கொண்டே இருக்கிறார்.
ஆளுநர் தாமதத்துக்கு அதிருப்தி
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளிலும் கூட ஆளுநரின் இந்த தாமதத்துக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் ஆளுநர் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும் கெடு கூட விதித்திருந்தனர். அத்துடன் 7 தமிழர் விடுதலைக்காக திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்தும் போராட்டங்களையும் நடத்தி இருக்கின்றன.
தொடர் இழுத்தடிப்பு
ஆனாலும் ஆளுநரும் மத்திய அரசும் இந்த விவகாரத்தில் இடைவிடாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்துள்ளது. இதனால் 7 தமிழர் விடுதலைக்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த நேரத்திலும் வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.
அற்புதம் அம்மாள் ட்வீட்
கடந்த 5-ந் தேதியன்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமது ட்விட்டர் பக்கத்தில், விடுதலை கோரி 30.12.2015ல் அளித்த கோரிக்கை மனு மீதான ஆளுநர் நடவடிக்கைகள் மர்மமானதாகவே நீடிக்கிறது. இதுகுறித்த அறிவின் RTI விண்ணப்பங்களுக்கு ஆளுநர் அலுவலகம் இன்று வரை செவி சாய்க்க மறுக்கிறது. புகார் மனுக்களை மாநில தகவல் ஆணையம் இன்னமும் விசாரணைக்கு பட்டியலிடாமல் இருப்பதும் வேதனையே என குமுறலை வெளிப்படுத்தி இருந்தார்.
வைகோ அறிக்கை
இதனிடையே சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 7 தமிழர் விடுதலையின் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று 7 தமிழர் விடுதலைக்கான அறிவிப்பு?
இதனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். இதனால் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் படி 2-வது முறையாகவும் ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.