திருமா அழைப்பை ஏற்று களத்தில் குதித்த வேல்முருகன்.. ‘பேரணியில் தவாக பங்கேற்கும்’- அதிரடி அறிவிப்பு!
சென்னை : அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் சமூக நல்லிணக்கப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கிறது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
விசிக, சிபிஐ, சிபிஐஎம் சார்பாக நடைபெற உள்ள சமூக நல்லிணக்க பேரணியில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழகத்தில் 51 இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்டது. அதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுப்பில் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு அடுத்த மாதம் அந்தப் பேரணி நடைபெற இருக்கும் நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி சமூக நல்லிணக்கப் பேரணியை நடத்த இருக்கிறது விசிக.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை! விசிக திருமாவளவனுக்கு மிரட்டல்கள்? டிஜிபி அலுவலகத்து பறந்த கோரிக்கை!
ஆர்.எஸ்.எஸ் பேரணி
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க உத்தரவிட்டும், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஆர்.எஸ்.எஸ். இதையடுத்து நவம்பர் மாதத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சமூக நல்லிணக்க பேரணி
இதற்கிடையே, அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடப்பது நல்லதல்ல என்றும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை எழுப்பின. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பேரணியில் இணைந்த கட்சிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுப்பதாக அறிவித்தன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளும் இதர ஜனநாயக சக்திகளும், இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் நடத்தும் சமூக நல்லிணக்க பேரணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
சீமான் ஆதரவு
நாம் தமிழர் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய தேசிய லீக் கட்சி ஆகியவை இந்தப் பேரணியில் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவித்தனர். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணி மட்டுமல்லாது அனைத்து விதமான பேரணிகளுக்கும் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அக்.11-ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான இந்த நிகழ்வில் அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
வேல்முருகன் அறிவிப்பு
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், வரும் 11ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற சமூக நல்லிணக்கப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கைகோர்க்கிறது என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தவாக தலைவர் வேல்முருகன், "இதுவரை தமிழ்நாட்டில் 50 இடங்களில் மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடந்தது இல்லை. தமிழகம் இந்தியாவிலே அமைதியான மாநிலம் அமைதியான மக்கள் வாழ்கின்ற ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு இஸ்லாமிய கிறிஸ்தவர்களோடு அன்புகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
ஒருபோதும் பணியக்கூடாது
பண்பாட்டில் சிறந்து விளங்கும் தமிழகம் மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டையிடக் கூடாது என சமூக நீதி ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்க்கு அனுமதி அளித்தது ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த தடை விதித்தது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி தவிர்த்து ஏனைய தேதிகளில் நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் கூறுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அழுத்தத்திற்கு ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகள் பணியக்கூடாது என்னுடைய வேண்டுகோள்.
தவாக பங்கேற்கும்
வரும் 11ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற சமூக நல்லிணக்கப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கைகோர்க்கிறது ஏனைய கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மதக் கலவரம் இல்லாமல் அமைதியான தமிழகம் சமய நல்லிணக்கத்திற்கு அமைதி வழி அறவழி மனிதச் சங்கிலி பேரணி நடைபெறுகிறது. விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பை ஏற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கலந்து கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.