வெடித்த சர்ச்சை! மீண்டும் திருமாவிற்கு தரப்பட்ட "பிளாஸ்டிக் சேர்".. திமுக எம்எல்ஏவால் வந்த பரபரப்பு!
சென்னை: விசிக தலைவர் எம்பி திருமாவளவனுக்கு திமுக எம்எல்ஏ அன்பழகன் பிளாஸ்டிக் சேர் கொடுத்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன், சில மாதங்களுக்கு முன் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்தார். அவரின் இந்த சந்திப்பு மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.
காரணம் இந்த சந்திப்பில் திருமா பிளாஸ்டிக் சேரில் அமர வைக்கப்பட்டு இருந்தார்.

பிளாஸ்டிக் சேர்
பக்கத்தில் ஷோபா இருந்தாலும் அவருக்கு பிளாஸ்டிக் சேர் கொடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் இணையம் முழுக்க சர்ச்சையானது. பலர் புகைப்படத்தை பகிர்ந்து திருமாவை அவமதித்துவிட்டனர் என்று விமர்சனங்களை வைத்தனர். அதோடு திருமாவின் புகைப்படத்தை பலர் பகிர்ந்து.. பக்கத்தில் இருக்கும் ஷோபாவில் உட்கார வைத்து இருக்கலாமே.. ஏன் இப்படி பிளாஸ்டிக் சேர் கொடுத்தீர்கள் என்று விமர்சனம் வைத்தனர்.

ராஜகண்ணப்பன்
ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் இதற்கு அப்போதே விளக்கம் அளித்தார். திருமாவளவனை தான் எந்த வகையிலும் அவமதிக்கவில்லை. அவரை ஷோபாவில் அமர சொன்னேன். அவர்தான் என் முகத்தை பார்க்க வசதியாக இருக்க வேண்டும் என்று சேரில் அமர்ந்து பேசினார். திருமாவளவனும், நானும் பல ஆண்டுகால நண்பர்கள், என்று விளக்கம் அளித்தார். அதன்பின் திருமாவும் இதற்கு விளக்கம் அளித்தார்.

திருமா விளக்கம்
திருமா அளித்த விளக்கத்தில், அருகில் இருக்கும் ஷோபாவில் அமர்ந்தால் அவரின் முகம் தெரியாது. இடையில் சிலை இருந்தது. இதனால் நான்தான் சேரில் அமர்ந்தேன். அவர் என்னை மூன்று முறை ஷோபாவில் அமர சொன்னார். நான்தான் சேரில் அமர்ந்தேன். குதர்க்கவாதிகள் சிலர் இப்படி செய்தி பரப்புகிறார்கள் என்று கூறினார்.

மீண்டும் சர்ச்சை
இந்த நிலையில் மீண்டும் இதே போன்ற விஷயம் ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதன்படி எம்பி திருமாவளவனுக்கு திமுக எம்எல்ஏ அன்பழகன் பிளாஸ்டிக் சேர் கொடுத்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமாவளவன் கடந்த 6ம் தேதி கும்பகோணம் சென்றார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கும்பகோணம் சென்ற திருமா கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனை சந்தித்து பேசினார்.

என்ன நடந்தது?
அப்போது குஷன் சேரில் திமுக எம்எல்ஏ அன்பழகன் அமர்ந்து இருக்க, அருகில் திருமாவிற்கு பிளாஸ்டிக் சேர் கொடுக்கப்பட்டது. திருமா - அன்பழகன் இருவரும் இந்த சந்திப்பில் சிரித்தபடி நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். திருமாவிற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஆனாலும் இந்த சந்திப்பில் அவருக்கு பிளாஸ்டிக் சேர் வழங்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. நெட்டிசன்கள் பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

புறக்கணிப்பு
திருமாவிற்கு மீண்டும் பிளாஸ்டிக் சேர் வழங்கிவிட்டனர். இது எந்த விதத்தில் நியாயம். அவருக்கு குஷன் சேர் வழங்கி இருக்க வேண்டும். டெல்லி போன போது, திருமாவை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதையாக நடத்தினார். அப்படி நடந்திருக்க வேண்டும், என்று நெட்டிசன்கள் சிலர் கூறி வருகிறார்கள். சிலர்.. அங்கு வேறு குஷன் இருக்கை இருந்திருக்காது. அருகில் இருந்த பிளாஸ்டிக் சேரில் திருமாவே போய் உட்கார்ந்து இருப்பார். இதை எல்லாம் பூதக்கண்ணாடி வைத்து பார்க்க கூடாது என்று நெட்டிசன்கள் சிலர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications