லாக்டவுன்: தடை இல்லாமல் இயங்கும் வேடசந்தூர் நூற்பாலைகள்- கூட்டமாக அழைத்து செல்லப்படும் தொழிலாளர்கள்!
திண்டுக்கல்: கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டாலும் வேடசந்தூர் பகுதி நூற்பாலைகள் மட்டும் இடைவிடாமல் இயக்கப்படுகின்றன. இந்த நூற்பாலைகளை இயக்குவதற்காக சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் கூட்டமாக கூட்டமாக தொழிலாளர்களை ஒரே வண்டியில் அடைத்து ஏற்றி வருவது இப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் தொகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி. இதனை கருத்தில் கொண்டு வறட்சி பகுதியாக அறிவித்து வேடசந்தூர் சுற்றுவட்டாரங்களில் நூற்பாலைகள் அமைக்க 1980களில் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் சட்டசபை துணை சபாநாயகருமான மறைந்த வி.பி.பாலசுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனடிப்படையில் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது 40க்கும் மேற்பட்ட நூற்பாலைகல் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகளில் 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

பெண்களின் வாழ்வாதாரம்
வேடசந்தூர் தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 10 முதல் 20 பேர் இந்த நூற்பாலைகளில் ஷிப்ட்டுகள் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை அழைத்து வர கிராமங்களுக்கே வேன்களையும் நூற்பாலைகள் இயக்குகின்றன. இதனால் கிராமப்புற பெண்களுக்கு இந்த நூற்பாலைகள் வாழ்வாதரமாகவும் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை..

வடமாநில தொழிலாளர்கள் குவிப்பு
அண்மைக்காலமாக வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் இந்த நூற்பாலைகளில் குவிக்கப்பட்டனர். பல நூற்பாலைகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்வதும் இயல்பான ஒன்றாகியும் விட்டது.

காற்றில் பறக்கும் கட்டுப்பாடுகள்
தற்போதைய கொரோனா பரவல் காலத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவிட்டனர். லாக்டவுன் காலத்திலும் நூற்பாலைகளை உரிமையாளர்கள் இடைவிடாமல் இயக்குகின்றனர். இதற்காக கிராமங்களில் இருந்து பெருமளவு பெண் தொழிலாளர்கள் ஒரே வாகனத்தில் எந்த வித சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் அழைத்துச் செல்கின்றனர்.

நூற்பாலை வாகனங்களுக்கு தடை இல்லை
இந்த பகுதியில் பொதுவாக வாகனப் போக்குவரத்துக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்து ஆய்வு நடத்துகின்றனர். ஆனாலும் நூற்பாலைகளின் பெயரால் ஆம்னி பேருந்துகள், வேன்கள் எந்தவித தடையும் இல்லாமல் இயல்பாகவே இயக்கப்பட்டு வருகின்றன. லாக்டவுன் என்பதே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே என்கிறது அரசு.

கிராமங்களில் கொரோனா அச்சம்
ஆனால் லாக்டவுன் காலத்திலும் தொழிலாளர்களை இப்படி சமூக இடைவெளியின்றி கூட்டமாக நூற்பாலைகளுக்கு அழைத்துச் செல்வதால் தங்களது கிராமங்களுக்கும் கொரோனா பரவுமோ என்கிற அச்சம் வேடசந்தூர் சுற்றுவட்டார கிராம மக்களிடையே எழுந்துள்ளது. மக்களின் இந்த பேரச்சத்தைப் போக்க வேண்டியதும் தமிழக அரசின் கடமை என்பது வேடசந்தூர் சுற்றுவட்டார மக்களின் வேண்டுகோள்.












Click it and Unblock the Notifications