பட்டியலில் நரிக்குறவர்! தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும்! வேல்முருகன் ஆட்சேபனை!
சென்னை: குறவன் குடி சமூகபெயரில் நரிக்குறவர் சாதி என்று ஒடுக்கப்பட்ட பழங்குடி பட்டியலில் இணைப்பதற்கு அளிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை திரும்ப பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ராஜபாளையம் மலையடிப்பட்டியில் உண்ணாவிரதம் இருந்து வரும் வனவேங்கைகள் கட்சியின் மாநிலத் தலைவர் இரணியனுக்கு தமது ஆதரவு என்றும் உண்டு எனத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திரும்பப் பெறுக
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களான MBC பட்டியலிலுள்ள மராட்டிய வாழ் வாக்ரிபோலி/நரிக்காரர்/குருவிகாரர் என உண்மையான சாதிபெயர் கொண்ட மக்களை தவறுதலாக நரி-குறவர் என்று அழைத்து குறிப்பிட்டு வருபவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, அம்மக்களை நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

புலம் பெயர்ந்தவர்கள்
வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த நக்கலா, வாக்ரிபோலி, குருவிக்காரர் மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நரிகாரர்/வாக்ரிபோலி என சாதிபெயர் கொண்ட மக்களுக்கு நரி குறவர் என்று பொதுவான பெயரில் ,சாதிய பட்டியலில் /ஒன்றிய,மாநில அரசிதழில்l அழைப்பதும் குறிப்பிடுவதும் உண்மையான குறவர் சமூகத்தையும் தமிழர்களின் அடையாளத்தையும் சிதைக்கும்.

வரலாறு பறிபோகும்
தமிழர்களின் தாய்குடியாக விளங்கும் குறவர் என்கிற பெயரில் ,வடமாநில மராட்டிய நக்கலா, வாக்ரிபோலி, குருவிக்காரர் என உண்மையான சாதி பெயர் கொண்ட சமூகத்தினருக்கு நரி குறவர் என்கிற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்குவது, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே, கல்வி, வேலைவாய்ப்பு , இட ஒதுக்கீடு எனத் தொடர்ந்து வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமைகள் பறிக்கும் நிலையில், பொதுவாக நரிக்குறவர்கள் என அழைக்கப்படும் போது, மிகவும் பின்தங்கியுள்ள தமிழர் குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் ,வரலாறு பறிக்கப்படும்.

ஆதி தொல்தமிழர்
எனவே, ஆதிதொல்தமிழர் குறவர்குடி மக்களின் நியாயமானக் கோரிக்கைகளை ஏற்று, நரிக்குறவர் என்ற சாதி பெயரில் இருந்து குறவர் என்ற சொல்லை நீக்க வேண்டும். அதே போல நரிக்குறவர் நல வாரியம் என்கிற வாரிய பெயரில் உள்ள குறவர் சொல்லை நீக்க உடனே நீக்க வேண்டும். வடமாநிலங்களை சேர்ந்த நக்கலா, வாக்ரிபோலி, குருவிக்காரர் ஆகிய சமூகத்தினருக்கு, அவர்களது உண்மையான அம்சமூக பெயரிலேயே, சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். அழைக்க வேண்டும். குறிப்பிட வேண்டும்.

வன வேங்கைகள்
குறவன்குடி சமூகபெயரில் நரிக்குறவர் சாதி என்று ஒடுக்கப்பட்ட பழங்குடி பட்டியலில் இணைக்க அளிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலை திரும்ப பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் மலையடிப்பட்டியில் உண்ணாவிரதம் இருந்து வரும் வனவேங்கைகள் கட்சியின் மாநிலத் தலைவரும், சகோதரருமான இரணியன் மற்றும் தோழர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications