அதிரடி.. விக்னேஷ் மரணம் கொலை வழக்காக மாற்றம்.. 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு! சிபிசிஐடி தீவிரம்
சென்னை: சென்னையில் சந்தேகத்துக்குரிய வகையில் மரணமடைந்த விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்தது.
இதையடுத்து, விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.
விக்னேஷ் மரணம் தொடர்பாக, G5 தலைமை செயலக காலனி போலீசார் மூவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்னேஷ் லாக்கப் டெத்...சட்டசபையில் அதிமுக அனல்... கொலை வழக்கு என முதல்வர் கூறியும் வெளிநடப்பு
விக்னேஷ் மரணம்
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் வாகன சோதனையின்போது, கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் வைத்திருந்ததையொட்டி, அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது, அவருக்கு வலிப்பு ஏற்ப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக மரணம்
ஆனால், விக்னேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றன. சட்டப்பேரவையிலும் விக்னேஷ் மரணம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை
விக்னேஷ் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதை அடுத்து, சிபிசிஐடி ஏ.எஸ்.பி சரவணன் விசாரணையைத் தொடங்கியுள்ளார். சிபிசிஐடி போலீசார் தலைமைச் செயலகக் காலனி காவல்நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்
இந்நிலையில் விசாரணைக் கைதி விக்னேஷின் தலை, கண், புருவம் என்று மொத்தம் 13 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும், பல இடங்களில் ரத்தக் கட்டுகள் இருந்தாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்னேஷின் முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது.
பேரவையில் முதல்வர் பதில்
இன்றும் சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது கிடைத்துள்ள விக்னேஷ் உடற்கூராய்வு முடிவுகளின்படி, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
கொலை வழக்காக மாற்றம்
மூன்று போலீசாரிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் உறுதி அளித்த நிலையில், விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, G5 தலைமை செயலக காலனி போலீசார் மூவர் மீது கொலை வழக்கு பதிவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.