உயிர்களைக் குடித்து... குடும்பங்களை சீரழிக்கும் வட்டி... கந்துவட்டி தடுப்புச் சட்டம் சொல்வது என்ன..?
சென்னை: கந்துவட்டிக் கொடுமையால் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்வு இன்று நடந்துள்ளது.
உள்ளத்தை உலுக்கும் இந்த நிகழ்வில் இருந்து பாடம் கற்க வேண்டிய கந்துவட்டி கொடூரன்களோ, இதனை சர்வ சாதாரணமாக கடந்து அடுத்த வசூலுக்கு ஆயத்தமாகிவிடுகிறார்கள்.
Recommended Video
இதற்கு காரணம் என்னவென பார்த்தால் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே.
ஜெயலலிதா ஆட்சிக்காலம்
கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது கந்துவட்டி தடுப்புச் சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. வியாபாரத்துக்கு ஆண்டொன்றுக்கு 18%-க்கு மேல் வட்டி வசூலித்தால் அது அதீத வட்டி வகையில் சேரும் என்றும், அதேபோல் தனி உபயோகத்திற்கு 12% -க்கு மேல் ஆண்டொன்றுக்கு வட்டி வசூலிக்கப்பட்டால் அதுவும் அதீத வட்டி விதிப்பு குற்றச்சாட்டில் சேரும் எனவும் இந்தச் சட்டம் சொல்கிறது.
3 ஆண்டு சிறை
கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது அளிக்கப்படும் புகாரில் உண்மையிருந்தால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதிக்க இந்த சட்டத்தில் இடமிருக்கிறது. அதீத வட்டி வசூலிக்கும் நபர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு தான் சிக்கலே எழுகிறது, நிமிர்ந்த நன்னடையும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளாக இருப்பின் நடவடிக்கை பாயும். இதே சபல பேர்வழிகளாக இருந்தால் புகார்கள் தூங்கும்.
15 நாட்களில் நோட்டீஸ்
இதனிடையே வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நீதிமன்றத்தையும் அணுகலாம். அவ்வாறு அணுகினால் புகாருக்குள்ளான நபர்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து 15 நாட்களுக்குள் விளக்கம் தருமாறு நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த விசாரணையில் கடன் பெற்றவர் செலுத்த வேண்டிய தொகைக்கு அரசாங்கம் அனுமதித்த வட்டித் தொகையை மட்டும் நீதிமன்றம் மூலமே செலுத்தலாம்.
நீதிமன்றம் மீட்டுக்கொடுக்கும்
ஒரு சில வட்டிக்காரர்கள் வசூலுக்கென்று ஆட்களை வைத்துக்கொண்டு கடன் பெற்றவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அபகரித்திருந்தால் அதனையும் நீதிமன்றமே மீட்டுக்கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இப்படி எளிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
தற்கொலை
அவ்வாறு செயல்படுத்தப்பட்டிருந்தால் தமிழகத்தில் கந்துவட்டிக்காரர்களின் கொடுமைகளுக்கு அஞ்சி எந்த உயிரிப்புகளுமே ஏற்பட்டிருக்காதே. இன்று கூட விழுப்புரம் மாவட்டத்தில் தட்டச்சு செய்து பிழைப்பு நடத்தி வந்த மோகன் என்பவர், விவரம் கூட தெரியாத தனது பிஞ்சு பிள்ளைகள் மூவர் மற்றும் மனைவியுடன் தற்கொலை செய்திருக்கிறார்.
எப்படி காரணம்
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகள் அதிகரிக்க தெரிந்தோ தெரியாமலோ வங்கிகளும் ஒரு விதத்தில் காரணமாக இருப்பது தான் வேதனையிலும் வேதனை. ஒரு பெயிண்டரோ, மெக்கானிக்கோ, தட்டச்சு வேலை செய்பவரோ, பூ வியாபாரியோ, ஐம்பதாயிரம் கடன் கேட்டுச் சென்றால் விரட்டி அடிக்காத குறையாக பல்வேறு நடைமுறைச் சிக்கலான காரியங்களை கூறி அவர்களை வங்கி பக்கமே தலைகாட்டாத வண்ணம் செய்துவிடுவார்கள்.
எதிர்பார்ப்பு
இந்தச் சூழலில் தேவைக்கு பணம் கிடைத்தால் சரி என்று கந்துவட்டிக் கொடூரன்களின் வலைகளில் வீழ்ந்து பலரும் தங்களின் எதிர்காலத்தையே பாழ்படுத்திக்கொள்ள வேண்டிய துரதிர்ஷ்ட நிலை உருவாகிறது. எனவே, இனி வரும் நாட்களில் கந்து வட்டியை முற்றிலும் ஒழிக்க அரசும்-உரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.