எடப்பாடி போராட்டம் நடத்த இதான் காரணம்.. ‘முதலைக் கண்ணீர்’.. காட்டமாக விமர்சித்த திமுக எம்.எல்.ஏ!
சென்னை : யோசித்து யோசித்துப் பார்த்து அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி, இன்று பத்திரிகையில் செய்தி வர நாம் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கிறார், உடனே விழிப்பு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் விமர்சித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி நடத்துவது மக்களுக்கான போராட்டம் அல்ல, முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி என விமர்சித்துள்ளார் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன்.
சென்னை கேபி பார்க் சாலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் திமுக சட்டத் துறை இணை செயலாளரும் எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.
கோவை செல்வராஜ் விலகல் ஏன்? ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காதது ஏன்?
எதிர்க்கட்சித் தலைவர் யார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பரந்தாமனிடம், கோவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எதிர்க்கட்சித் தலைவர் என்றார் யார்? அண்ணாமலையா? எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் "அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அரசியலில் அவர் பஸ்ஸை விட்டு விட்டு ஏறுகிறார்.
யோசித்து யோசித்து அரசியல்
யோசித்து யோசித்துப் பார்த்து அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று பத்திரிகையில் செய்தி வர நாம் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கிறார். உடனே விழிப்பு வருகிறது.. ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என்பதை மக்கள் இது தேவையானது தான் என்று ஏற்றுக்கொண்டனர். மக்கள் போராடாத ஒரு நிகழ்வுக்கு அரசியலில் தன் இருப்பை காட்டுவதற்காக போராட்டங்களை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.
முதலைக்கண்ணீர்
அது மக்களுக்கான போராட்டம் அல்ல. முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் பத்து மடங்கு அதிகமாக வரி விதிக்கப்பட்டது. இன்றைய முதல்வர் அதற்காக போராட்டம் நடத்தி வரியை குறைக்கச் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பின் முறையாக ஆய்வுகளை நடத்தி குறிப்பிட்ட சதவீதம் தான் ஏற்ற வேண்டும் என்ற அறிவியல்பூர்வ அணுகுமுறை நோக்கத்துடன்தான் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வை மக்களும் ஏற்றுக்கொண்டனர்.
பின்வாங்கப் போவதில்லை
இல்லையென்றால் மக்கள் வீதிக்கு வந்து போராடி இருப்பார்கள். நாங்கள் வரியைப் பெற்று மக்களுக்கு திட்டங்களைக் கொடுக்கிறோம். அவர்களைப் போல வரியை மட்டும் உயர்த்திக் கொண்டு, திட்டங்களைக் கொண்டுவராத அரசு திமுக அரசு அல்ல, இரண்டையும் சம அளவில் செய்யக்கூடியது தான் திமுக அரசு. மாதம் ஒருமுறை மின் கட்டண பதிவு முறையில் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.