ஓடவோ ஒளியவோ முடியாது..சேது கால்வாய் விவகாரத்தில் விழிபிதுங்கும் பாஜக- நயினார் அடக்கி வாசித்தது ஏன்?
சென்னை: சேது சமுத்திர திட்டம் அல்லது சேது கால்வாய் திட்ட விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான எதிர்ப்பை காட்டுகிறார்; ஆனால் சட்டசபையில் தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றலாம் என்கிறார்.
சேது கால்வாய் திட்டம் என்பது 160 ஆண்டுகால தமிழரின் கனவு திட்டம். இத்திட்டத்துக்கு திராவிட கட்சிகள் குரல் கொடுத்திருக்கின்றன. பேரறிஞர் அண்ணா தொடங்கி இன்றைய முதல்வர் ஸ்டாலின் வரை திமுக தலைவர்கள் காலந்தோறும் சேது கால்வாய் திட்டத்துக்காக குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றனர்.
2007-ம் ஆண்டு சேது சமுத்திர திட்டத்துக்காக திமுக அரசு பந்த் நடத்த முடிவெடுத்தது. அப்போது உச்சநீதிமன்றத்துக்கு அதிமுக போனது. அந்த வழக்கில் திமுக அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. அப்போது ஆட்சியே பறிபோகும் என்கிற அளவுக்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனம் இருந்தது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவும் கூட சேது கால்வாய் திட்டத்துக்கு ஆதரவாகவே இருந்தது. சேது கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆய்வு நடத்துமாறு, தேசிய பொறியியல் சுற்றுச்சூழல் ஆய்வு மய்யமான நீரிக்கு 2001- உத்தரவிட்டவர் அப்போதைய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி.
'நீரி' ஆய்வு மய்யம், இத் திட்டம் பற்றி விரிவாக ஆய்வு நடத்தி தனது அறிக்கையை - அன்றைய பாஜகவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் கோயலிடம் தாக்கல் செய்தது. நீரி ஆய்வு அறிக்கை மீதான ஆய்வுக் கூட்டத்தை 2002-ல் நடத்தியவர் அப்போதைய மத்திய இணை அமைச்சர் திருநாவுக்கரசர். பாம்பன் தீவுக்கு கிழக்கே உள்ள ஆதம் பாலத்தின் வழியாக சேது கால்வாய் திட்டம் உருவாக்கப்படும் என்று 2003-ல் ராஜ்யசபாவில் அறிவித்தவர் அப்போது பாஜகவின் கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சரான சத்ருகன் சின்கா. பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, வி.பி.கோயல், சத்ருகன் சின்கா, திருநாவுக்கரசு, உமாபாரதி என பலராலும் ஆய்வு செய்யப்பட்டு பின் ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டம்தான் சேது கால்வாய் திட்டம்.
பின்னர்தான் ராமர் பாலம் என்ற பெயரில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு பாஜக, சேது கால்வாய் திட்டத்தை எதிர்த்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு பாதைகள் அதாவது ராமர் பாலத்தை பாதிக்காத வகையிலான பாதையில் கால்வாய் வெட்டுதல் என பரிசீலனை செய்யப்பட்டது. இதில் ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல மத்திய பாஜக அரசு முன்னர் ஒரு பாதையை வழிவகுத்தது. அந்த பாதை வழியாகத்தான் சேது கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. அரசியல் சூழ்நிலைகளால் பாஜக, அதிமுக எதிர்க்க சேதுக் கால்வாய் திட்டம் முடக்கப்பட்டுவிட்டது.
சேது சமுத்திரத்தின் வரலாற்று பின்னணி இதுதான். சேதுக் கால்வாய் திட்டத்தை முற்று முழுதாக பாஜக எதிர்க்கவில்லை. பாஜகவும்தான் இந்த திட்டத்தை ஆதரித்தது. ஆகையால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வதைப் போல சேது கால்வாய் திட்டத்தால் இந்தியாவின் மானம் கப்பலேறாது. இதனை புரிந்து கொண்டுதான் இந்த வரலாற்றின் அடிப்படையில்தான் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., சட்டசபையில் சேது கால்வாய் திட்ட தீர்மானத்தை ஆதரித்தார் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.