இந்திய அணியில் ஏன் ஷமி தேர்வு செய்யப்பட வேண்டும்.. அனுபவத்தை பயன்படுத்துமா பிசிசிஐ?
சென்னை: டி20 உலகக்கோப்பைத் தொடரில் பும்ராவுக்கு மாற்று வீரராக அனுபவம் வாய்ந்த ஷமி அல்லது சிராஜ் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் பும்ரா, ஜடேஜா இல்லாமல் இந்திய அணி பங்கேற்கும் டி20 உலகக்கோப்பையை பார்க்க தயாரா என்று ரசிகர்களை கேட்டிருந்தால், கொஞ்சம் மிரண்டிருப்பார்கள். ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம் வரும் இருவரும், இந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதுகில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக அந்தக் காயத்தை மேலும் பெரிதுபடுத்த விரும்பாததால் உலகக்கோப்பை தொடரில் இருந்து நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளார்.

பும்ரா விலகல்
வேகப்பந்துவீச்சாளர்களையும், காயத்தையும் எப்போதும் பிரித்துப்பார்க்க முடியாது. ஆனால் பும்ராவின் காயம் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை பலவீனப்படுத்தியுள்ளது. ஜடேஜாவை ரீப்ளேஸ் செய்வதே பெரும் சிக்கலாக இருந்து வரும் சூழலில், டெத் ஓவர்களுக்கு என நேந்துவிடப்பட்ட பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் வீரர் யார் என்பதே பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 2009ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் சிங் இல்லாமல் களமிறங்கி இந்திய அணி தடுமாறியது. அதுபோல் நடப்பு தொடரிலும் நடக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய ஆடுகளம்
அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்கா தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணியில் உள்ள 7 முதல் 8 வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியவர்கள் என்றும், மற்ற அனைவரும் அனுபவம் இல்லாத புதிய வீரர்கள் என்றும் ரோஹித் ஷர்மா பேசி இருந்தார். பவுன்சர் மற்றும் பேஸி ஆடுகளங்களில் கடினமான பந்துகளாக கருதப்படும் கூக்கபரா பந்துகள் சீக்கிரம் இளகாத தன்மைக் கொண்டவை. இதன் காரணமாகவே கொஞ்சம் கூடுதல் பவுன்சர் கிடைக்கும்.

அனுபவ வீரர்கள்?
தற்போதைய இந்திய அணியில் உள்ள பந்துவீச்சாளர்களில் அனுபவ வீரர்கள் என்று பார்த்தால், புவனேஷ்வர் குமார், அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துவீசிய அனுபவம் கொண்டவர்கள். மீதமுள்ள ஹர்சல் படேல், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் அனுபவமில்லாத வீரர்கள். இதனால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி கொண்டு செல்ல பும்ரா போன்ற ஒரு அனுபவ வாய்ந்த பந்துவீச்சாளரின் தேவை உருவாகியுள்ளது. புனவேஷ்வர் குமாரின் ஃபார்ம் கொஞ்சம் கவலையடைய வைத்துள்ளதால், இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களே தேவையாக இருக்கின்றனர்.

சிராஜ், ஷமி
2015 உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பிருந்தே ஷமி ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துவீசிய அனுபவம் கொண்டவர். அதேபோல் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சிராஜ் இந்திய அணி பந்துவீச்சாளர்களை வழிநடத்திச் சென்றவர். அதேபோல் வெளிநாட்டு ஆடுகளங்களில் சிராஜின் வேகமும், ஸ்விங்கும் இந்திய அணிக்கு பெரும் பயனாக இருந்துள்ளது. இதனால் புதிய வீரர்களை தேர்வு செய்யாமல், அனுபவ வீரர்களான ஷமி அல்லது சிராஜ் ஆகியோரை தேர்வு செய்வதே இந்திய அணிக்கு பயனாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இளம் வீரர்களின் செயல்பாடுகளை பார்த்த பின்னரே பும்ராவின் ரீப்ளேஸ்மெண்ட் வீரர் யார் என்பது குறித்த முடிவுக்கு இந்திய அணி நிர்வாகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications