லட்டு போல வந்த உத்தரவு.. அட.. அதை வச்சே ஆட்டத்தைக் கலைக்கலாமே! ஓபிஎஸ் அதிரடி முடிவின் பின்னணி இதானா?
உச்ச நீதிமன்ற தீர்ப்பையே தனது வெற்றியாகக் கருதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிரடி முடிவை எடுத்துள்ளார் ஓபிஎஸ்.
சென்னை : இரட்டை இலை சின்னத்தில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈபிஎஸ் அணி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து, தங்கள் அணியின் வேட்பாளரை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வரிந்துகட்டி இறங்கிய ஓபிஎஸ், இப்போது தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதன் பின்னணி என்ன?
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலேயே இல்லை எனக் கூறியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஆனால், உச்ச நீதிமன்றம் நேற்று பிறபித்த உத்தரவில், ஓபிஎஸ் அணியினர் உள்ளடங்கிய பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடனே வேட்பாளரை நிறுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், அதனையே தங்கள் வெற்றியாகக் கருதி, தங்கள் முடிவை மாற்றிக் கொண்டுள்ளது ஓபிஎஸ் தரப்பு. ஒருவேளை இடைத்தேர்தலில் நின்றாலும், தங்களுக்கு சாதகமான முடிவு வராது என்பதால், ஓபிஎஸ் இந்த முடிவை எட்டி இருக்கிறார் என்கிறார்கள்.
அதிமுக ஒற்றுமையாக போட்டியிட வாய்ப்பு.. இரட்டை இலையில் யார் நின்றாலும் ஆதரவு.. அழுத்தி சொன்ன ஓபிஎஸ்!
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அதிமுக, எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழலில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக ஓபிஎஸ் தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்டி முடிவை எடுக்க வேண்டும். இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இடைக்கால ஏற்பாடு மட்டும் தான் என்று உத்தரவிட்டது.
அவைத்தலைவர் ஏற்பாடு
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக வேட்பாளர் விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் அதை விரிவான அறிக்கையாகத் தயார் செய்து தேர்தல் ஆணையத்திடம் வரும் திங்கட்கிழமை அன்று கொடுப்பதற்காக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஏற்பாடு செய்துள்ளார்.
ஓபிஎஸ் தரப்புக்கும்
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் இந்த அஃபிடவிட் படிவம் அனுப்பப்பட இருக்கிறது. அவர்களும், இதில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்று சொல்வார்கள். அதுவும் பதிவு செய்யப்படும். இதன்பின் அந்த அறிக்கைகள் விரிவாகத் தயார் செய்யப்பட்டு திங்கள் காலை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஈபிஎஸ் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனித்தனியாக ஆலோசனை
இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதேபோல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இரட்டை இலைக்கு ஆதரவு
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டியிடவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் வீட்டில் நடந்த ஆலோசனைக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை வைத்திலிங்கம் வாசித்தார்.
வைத்திலிங்கம்
தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. எங்களை எதிர்த்தவர்களுக்கு, நாங்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டோம் என்று சொன்னவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஓபிஎஸ் அணியும் இணைந்ததுதான் அதிமுக என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதைக் குறிப்பிட்டு வைத்திலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தக்க சமயத்தில் வந்த தீர்ப்பு
இதனைத் தொடர்ந்து, தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறும் முயற்சிகளில் இறங்கிவிட்டது ஓபிஎஸ் அணி. அதிமுகவில் தனது நிலையை உறுதி செய்வதற்காகவே போராடி வந்தார் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலேயே இல்லை எனக் கூறியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. இப்போது வந்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவு ஓபிஎஸ்ஸும் உள்ளடங்கியதுதான் அதிமுக என்று உள்ளது.
பலவீனம்
மேலும், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனது பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்ள ஓபிஎஸ் விரும்பவில்லை. இந்த இடைத்தேர்தலில் ஈபிஎஸ் அணிக்கு எதிராக தாங்கள் போட்டியிட்டால் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்பதால், பாஜகவை களமிறக்கி விடலாம் என ஓபிஎஸ் முயற்சித்தார். ஆனால், பாஜக அதற்கு முன்வரவில்லை. இதனால், கால தாமதம் செய்துவந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் வேட்பாளரை அறிவித்ததால் வேறு வழியின்றி தானும் வேட்பாளரை அறிவித்தார்.
சாக்காக வைத்து
இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவையே சாக்காக வைத்து ஓபிஎஸ் அணி, தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறும் முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், தங்கள் அணியின் பலவீனம் வெட்டவெளிச்சமாவதை தவிர்க்க நினைக்கிறார் ஓபிஎஸ். மேலும், தான் அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. ஈபிஎஸ் அணியினரும், ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினருக்கும் வேட்பாளர் ஒப்புகை படிவத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், தான் அதிமுகவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதையே வெற்றியாகக் கருதி, இடைத்தேர்தல் களத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார் ஓபிஎஸ்.
கட்சியின் நலனுக்காகவே
மேலும், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன் என ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். அந்த அடிப்படையில், தற்போது எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளருக்கே இரட்டை இலை சின்னம் செல்வதற்கு, ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்திருக்கிறார் ஓபிஎஸ். இதன் மூலம், தான் கட்சியின் நலனுக்காகவே செயல்படுவதாகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.