சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கொடுத்த அதீத முன்னுரிமை.. தனிமரமாகிறதா அதிமுக?
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு அதீத முன்னுரிமை கொடுத்த அதிமுக, மற்ற கூட்டணி கட்சிகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்தது. இதனால் அப்போதே கோபத்தில் இருந்த பாமக தலைமை, இப்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை கழட்டிவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அதிமுக உடன் பாஜக, தமிழ்மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே இணக்கமாக உள்ளன. மற்ற கட்சிகள் அதிமுக மீது நேரடியாக குற்றம்சாட்டி கூட்டணியை விட்டு கழன்று கொண்டுள்ளன. சட்டசபை தேர்தலின் போதே அதிமுக தங்களை மதிக்கவில்லை என தேமுதிக கூட்டணியை விட்டு விலகியது.
இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், தனக்கு அதிமுக நிர்வாகிகள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று வெளிப்படையாகவே விமர்சித்தார். தன்னுடைய தோல்விக்கு அதிமுக நிர்வாகிகள் அளிக்காத ஒத்துழைப்பு மற்றும் கேட்ட தொகுதி ஒதுக்காதது போன்றவை தான் காரணம் என்று விமர்சனமும் செய்தார்.
அதிமுகவுக்கு அல்வா... ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு... பா.ம.க.வின் தடம் மாறிய கூட்டணி பயணம்
எடப்பாடி பழனிசாமி
இப்படி ஒவ்வொரு கட்சிகளும் அதிமுகவை விமர்சனம் செய்துவந்த நிலையில் பாமகவும் அதிமுகவிற்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்து கூட்டணியை விட்டு விலகி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் இதுபற்றி கூறும் போது "சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
9 மாவட்ட தேர்தல்
இதேபோல் பாமகவால் கூட்டணி கட்சிகள் பலன் அடைந்தன. ஆனால் அவர்களால் பாமகவிற்கு எந்த பலனும் இல்லை என்றும் ராமதாஸ் விமர்சித்தார். அத்துடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடப்போவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக தனித்து விடப்பட்டு வருகிறது,
பாஜகவிற்கு கிடைத்தது
ஏற்கனவே அதிமுக, சட்டசபை தேர்தலின் போது பாஜகவுக்கு அதீத முன்னுரிமை கொடுத்தது. பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்று அதிமுக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் , பாஜக மட்டும் எந்தெந்த தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்கிற லிஸ்டுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. இப்போது பாஜக வெற்றி பெற்றுள்ள நெல்லை, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாகும். இதேபோல் பாஜக நின்ற 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் அதிமுகவிற்கு மிகமிக பலமான வாக்கு வங்கி உள்ள தொகுதிகள் ஆகும். தொகுதி நிர்வாகிகளின் அதிருப்தியையும் மீறி, கூட்டணி கட்சிகளின் அதிருப்தியையும் மீறித்தான் அதிமுக தலைமை பாஜக கேட்ட 20 தொகுதிகளை விட்டுக்கொடுத்தது.
10.5 சதவீதம் ஒதுக்கீடு
இதுவும் பாஜகவிற்கு அதிமுகவின் மீதான அதிருப்தியை அதிகரித்தது. ஏனெனில் பாமக கேட்ட தொகுதிகளை அதிமுக தரவில்லை. குறைவான இடங்களையே கொடுத்தது. அதேபோல் தொகுதிகளிலும் அதிமுக பாஜக உடன் செய்து கொண்ட சமரசத்தை செய்து கொள்ளவில்லை. அதாவது கேட்ட தொகுதிகளை தரவில்லை. எனினும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்ற ஒன்றை நோக்கம் காரணமாக பாமக சமரசம் செய்து கொண்டு அதிமுக பாஜக கூட்டணியில் நீடித்தது.
Recommended Video
பாமக வெற்றி
சட்டசபை தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க 5 தொகுதிகளில் வென்றுள்ளது. சேலம் மேற்குத் தொகுதியில் இரா. அருள், பென்னாகரம் தொகுதியில், பென்னாகரத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதேபோல், தருமபுரி தொகுதியில், வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் பாமக சார்பில் வெற்றி பெற்றனர்.
ஓபிஎஸ் பேச்சு
அதேநேரம் அதிமுக சட்டசபை தேர்தலில் வெறும் 65 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை பறிகொடுத்தது. 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம், வேளாளர் பெயர் விவகாரம் மற்றும் டிடிவி தினகரன் தனித்து போட்டியிட்டது போன்ற காரணங்களால் தென்மாவட்டங்களில் அதிமுக மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. 10.5 சதவீத இடஒதுக்கீடு விவாகரத்தில் வெளிப்படையாக ஓபிஎஸ் உள்பட தென்மாவட்ட அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கோபம் அடைந்தார்.
திமுகவின் அதிரடிகள்
இதனிடையே பாஜகவிற்கு அளித்து வரும் முன்னுரிமை காரணமாக அதிமுகவின் சுயதன்மை காலியாகி வருவதாக அதிமுகவிலேயே இருபிரிவாக மோதல்கள் உள்ளன. அதிமுக நிர்வாகிகள் பலரும் பாஜகவை தோளில் சுமந்த காரணத்தால் தான் நாம் தோல்வியை சந்தித்தோம் என்று பேசி வருகிறார்கள். இதுஒருபுறம் எனில், கொடநாடு விவகாரம், குட்கா ஊழல், மாநகராட்சி டெண்டர் ஊழல், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஊழல் என ஒவ்வொரு தலைவர்களுக்கு எதிராகவும் ஒரு அஸ்திரத்தை எடுத்து வைத்துக்கொண்டு திமுக அரசு அதிரடியை தொடங்கி உள்ளது.
பாமக முடிவு
இதை எல்லாம் யோசித்த பாமக தலைமை, கடைசியில் அதிமுகவில் கவர்ச்சிகரமான தலைவர் இல்லை என்ற முடிவுக்கு வந்ததுடன், கூட்டணியை அதிமுக உடன் தொடருவது இல்லை என்று அதிமுகவை தனித்துவிட்டு உள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை விழுப்புரம் உள்பட 7 மாவட்டங்களில் பாமகவிற்கு மிகவும் வலுவான வாக்கு வங்கி உள்ளது. அங்கு தங்களது நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுத்து வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் அமைப்பு ரீதியாக பலப்படுத்த முடியும் என்பதால் அதிமுக உள்பட கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டுள்ளது பாமக. இதுவும் உண்மையில் அதிமுகவிற்கு பலமான அடியாக பார்க்கப்படுகிறது. திமுகவோ பாமகவின் தனித்து போட்டியிடும் முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ளது.