ஜாலியா வாக்கிங் போறாங்க.. லெமன் டீ குடிக்கிறாங்க.. குற்றாலத்துல குளிக்கிறாங்க.. ம்ம்ம் கலக்குங்க!
Recommended Video
சென்னை: குற்றாலத்தில் ஜாலியா வாக்கிங் போறதும் லெமன் டீ குடிக்கிறதும் குற்றாலத்துல குளிக்கிறதும்ன்னு இருப்பதற்காகவா மக்கள் வாக்களித்தனர்?
நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரச்சினைகளை ஒரு பிரதிநிதியிடம் சொல்லிவிட்டால் அவர் அந்த பகுதி மக்கள் சார்பில் அரசிடம் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவார் என்பதாலேயே வாக்களித்து தொகுதி வாரியாக கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி என தேர்வு செய்கிறோம்.
அப்படி தேர்வு செய்யப்பட்ட 18 தகுதிநீக்க எம்எல்ஏக்களும் 4 எம்எல்ஏக்களும் மக்கள் பிரச்சினைகள் குறித்து கிஞ்சித்தும் கவலைக் கொள்ளாமல் ரிசார்ட் ரிசார்ட்டாக சுற்றிக் கொண்டு வருவது மக்களுக்கு வேதனையை தருகிறது.
மக்கள் பணி
தகுதிநீக்க வழக்கில் இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வரும் நிலையில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அதிமுகவினர் இவர்களை கடத்தக் கூடும் என்பதால் இருநாட்களுக்கு குற்றாலத்தில் தங்க முடிவு செய்துள்ளனர். அதான் தகுதி நீக்கம் செய்துவிட்டாயிற்றே அவர்கள் எப்படி மக்கள் பணியை கவனிப்பர் என நீங்கள் கேட்கலாம்.
நம்பிக்கை
இதோடு முடிந்து விட்டதா என்ன?. அவரவர் தொகுதியிலேயே இந்த 18 பேரும் தங்கியிருந்தால் மக்களை மீறி அவர்களை யார் கடத்த முடியும். இப்படி செய்திருந்தால் மக்களின் அன்பையும் பாசத்தையும் நம்பிக்கையையும் சம்பாதித்திருப்பர்.
ஆதரவு
அடுத்து வரவுள்ள தேர்தலில் மக்களும் இவர்களுக்கே வாக்களிக்க வழி வகுத்திருக்கும். இதை கண்டு இனி தொகுதி பக்கமே எட்டி பார்க்காத எம்எல்ஏக்கள் கூட தொகுதிக்கு வாரம் ஒருமுறையாவது செல்லும் நடைமுறை வந்திருக்கும். இதனால் இந்த 18 பேருக்கும் இன்னும் மக்கள் ஆதரவு கூடியிருக்கும்.
போனில் அரட்டை
ஆனால் அதையெல்லாம் விடுத்துவிட்டு ரிசார்ட் ரிசார்ட்டாக செல்வது, அங்கு சிறுபிள்ளைத்தனமாக ஊஞ்சல் விளையாடுவது, ஷட்டில் விளையாடுவது, லெமன் டீ குடிப்பது, கொத்து கொத்தாக வாக்கிங் செல்வது, போனில் அரட்டை அடிப்பது என்றிருப்பதால் இதை பார்க்கும் மக்களுக்கு வேதனையை தருகிறது.
வெற்றி பெறும் வாய்ப்பு
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால் கடுக்க நீண்ட வரிசையில் நின்று கொண்டு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் குறித்து எந்த விவரமும் தெரியாமல் கட்சி தலைமையை முன்னிறுத்தி அவர்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு வாக்களித்து வருகின்றனர். இந்த 18 பேரும் அவரவர் தொகுதியில் இருந்து மக்களை சந்தித்து வந்தால் ஒரு வேளை தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தாலும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
ரிசார்ட்டில்...
இப்படி ரிசார்டில் சுற்றுவதன் மூலம் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு வந்தால் யாருக்கு பிரயோஜனம். சட்டசபைக்கு சென்றால் எதையாவது சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்வதும், ஆளும் கட்சிக்குள் பிரச்சினை என்றால் ரிசார்ட்டில் சொர்க்க வாழ்க்கை வாழ்வதும் இருந்தால் மக்கள் பிரச்சினைகளை யார் பார்ப்பது என்பதை இனியாவது இவர்கள் கற்றுக் கொள்வார்கள் என நம்புவோமாக!