தமிழக காங்கிரஸ் தலைமை மாறப் போகிறதோ..??
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா?
சென்னை: ஒரு வழியாக தமிழக காங்கிரஸ் தலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் இருக்கிற கட்சிகளிலேயே எக்கச்சக்க கோஷ்டி சண்டை இருப்பது தமிழக காங்கிரசில்தான். எப்பவுமே கோஷ்டி பூசல், எப்பவுமே தகராறு, எப்பவுமே உட்கட்சி விவகாரம் என நீண்டு கொண்டே இருக்கும்.
இந்த பிரச்சனையை மட்டும் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் அப்போதிருந்தே தீர்க்கப்படாமலேயே உள்ளது. இப்போதும் சில மாதங்களாகவே பூசல் அதிகரித்தது. இதனால் ஒவ்வொரு கோஷ்டி தலைவர்களும் ஆளாளுக்கு கிளம்பி சென்று தனித்தனியாக ராகுலை பார்த்து குறைகளை சொல்லி, கோரிக்கையையும் கொடுத்து விட்டு வந்தார்கள்.
சரமாரி புகார்கள்
திருநாவுக்கரசு, ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பினர் வெளிப்படையாகவே ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர். இதில் ஈவிகேஎஸ் திருநாவுக்கரசரை பற்றி நிறைய புகார்களை டில்லிக்கு கொண்டு சென்றதாகவும், குஷ்புவை மாநில காங்கிரஸ் தலைவராக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது.
பீட்டர் அல்போன்ஸ்
எப்படி பார்த்தாலும் தமிழக காங்கிரசிலிருந்து புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்ததால், வேறு ஒரு புதிய தலைமையான பீட்டர் அப்போன்சை கொண்டு வர ராகுல் யோசித்ததாகவும் சொல்லப்பட்டது. ஏனென்றால் திருநாவுக்கரசர் பொறுப்புக்கு வரும்போதே பீட்டர் அல்போன்ஸ் பெயரும் அடிபட்டதால் இந்த சந்தேகம் வலுக்க தொடங்கியது.
5 மாநில தேர்தல்
ஆனால் கடந்த மாதம் சென்னை வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத், மாநில தலைவர் திருநாவுக்கரசரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி விட்டு போனது இன்னும் குழப்பம் அதிகமாகிவிட்டது. என்றாலும் இது சம்பந்தமான அறிவிப்பு வரும் என்று முன்பிருந்தே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்குள் 5 மாநில தேர்தல் பிரச்சாரம்சூடு பிடிக்க ஆரம்பித்ததும், ராகுல் அதில் பிஸியாகி விட்டார்.
ஆலோசனை
கட்சி பணிகளை கவனிக்க அவருக்கு நேரமும் இல்லாமல் இருந்தது. தற்போது பிரச்சாரம் ஓய்ந்துவிட்டதால், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி திரும்பி விட்டனர். இனி, மாநில கட்சி விவகாரங்கள் தொடர்பான ஆலோசனையில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். இதன் முதல்கட்டமாக, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது. இதையடுத்து இன்று காலை அவர் டெல்லிக்கு கிளம்பி போயிருக்கிறார்.
புதிய பொறுப்பு?
ஒருவேளை புகார்கள் குறித்தும், பூசல் குறித்தும் ஏதேனும் பேச்சு நடத்த இளங்கோவனை ராகுல் அழைத்திருப்பாரா? அல்லது புதிய தலைமை பொறுப்பு அளிக்க அழைத்திருப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அல்லது புதிய தலைவரை நியமித்து தமிழக காங்கிரஸுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் ராகுலிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.