அதை விடுங்க.. ரஜினி போட்டியிடும் தொகுதி "இது"தானாமே.. திமுக சமாளிக்குமா.. பயங்கர எதிர்பார்ப்பு..!
ரஜினிகாந்த் தேர்தலில் தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் போட்டியிடுவாரா? அப்படியே போட்டியிட்டால் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆர்வம் பரவலாக எழுந்துள்ளது.
கட்சி தொடங்க போவது உறுதி என்றும், அந்த கட்சியின் பெயரை இந்த மாசம் இறுதியில் அறிவிக்க போவதாகவும் ரஜினி சொல்லி உள்ளார்.. புது கட்சி சம்பந்தமான வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. எனினும், கட்சி ஆரம்பிக்கும் ரஜினி, தானே நேரடியாக களம் இறங்கி தேர்தலை சந்திப்பாரா? அல்லது தன் கட்சி சார்பில் மற்றவர்களை இறக்கி விடப் போகிறாரா என்பது பெரிய எதிர்பார்ப்புதான்.
இந்த முறை தேர்தலில் ரஜினிகாந்த்தின் வருகை அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. ரஜினியின் வருகையால், 15% வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என்று ஒரு தரப்பு சொல்லி நம்பிக்கை தெரிவித்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, 15%-க்கும் அதிகமான வாக்குகள் பிரிந்துவிட்டாலே, திமுக, அதிமுக என எந்த கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.
தாக்கம்
அதாவது எம்பி தேர்தலில் அதிக அளவு வாக்குகள் பிரிந்தாலும் அதனால் பெரிசாக பாதிப்பு வராது.. ஆனால், எம்எல்ஏ தேர்தலில் கொஞ்சம் வாக்கு பிரிந்தாலும், மிகப்பெரிய தாக்கத்தை தந்துவிடும் என்பது வழக்கமான இயல்பு. அதனால் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை இந்த முறை ஏதாவது ஒரு வகையில் திருப்பத்தை தரும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு.
முதல்வர் பொறுப்பு
அடுத்ததாக, ரஜினி தனித்து நின்று போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுகிறது.. ஏனென்றால், இப்படித்தான், கமல் கட்சியை தொடங்கியபோது, எம்பி தேர்தலில் போட்டியிடாமல், கட்சியினரை தமிழகம் முழுவதும் இறக்கினார்... அதுபோலவே ரஜினியும் செய்வாரா என்ற விவாதங்களும் மற்றொரு பக்கம் நடந்து வருகிறது. முதல்வர் பொறுப்பை தான் ரஜினி ஏற்க மாட்டேன் என்று சொல்லி இருந்தார்.. மற்றபடி போட்டியிட மாட்டேன் என்று அவர் இதுவரை சொன்னதில்லை.
2 ஆப்ஷன்கள்
அதனால் அவர் கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படியே போட்டியிட்டாலும் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. இதற்கு 2 ஆப்ஷன்களும் ஏற்கனவே கசிந்து கொண்டிருகின்றன.. ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஆகும். இங்குதான் ரஜினி அண்ணன் சத்தியநாராயணா அடிக்கடி சென்று வருகிறார்.. அங்கு பலரை சந்தித்துப் பேசியும் வருகிறார்.
நாச்சிக்குப்பம்
மேலும் ரஜினி ரசிகர்களுடைய மக்கள் மன்றத்தினரும் அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏரி, குளங்களை தூர்வாருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்களாம். அந்த பணிகள் தற்போதும் நடந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, ''என் சொந்த ஊர் நாச்சிக்குப்பம்' என ரஜினி சொல்லும் ஒரு சீன் தர்பார் படத்தில் இடம் பெறுகிறது. அதனால், இந்த வேப்பனஹள்ளி தொகுதியில்தான் ரஜினி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றார்கள்.
மதுரை
அடுத்ததாக, மதுரையையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது.. இங்குதான் முதன்முதலில் ரசிகர் மன்றத்துக்கான விதை பதியப்பட்டது.. கட்சி ஆரம்பித்தால் இங்குதான் தன் மாநாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்று ரஜினி அப்போதிருந்தே ஆசைப்பட்டு வருகிறார்.. அதனால் மதுரையில் ரஜினி களம் காண வாய்ப்பு இருக்குமா என்பதையும் யோசித்து பார்க்க வேண்டி உள்ளது.
திருவண்ணாமலை
மற்றொரு இடம் திருவண்ணாமலை.. இதனை பகிரங்கமாக சொன்னது அதே சத்தியநாராயணாதான்.. இங்கு சாமி கும்பிட வந்த அவர், "பகவான் விரும்பினால், ரஜினிகாந்த் சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது" என்றார். ரஜினிக்கும் திருவண்ணாமலைக்குமான தொடர்பு மிக ஆழமானது.. இருபது வருஷத்துக்கு முன்பு கிரிவல பாதையின் 14 கிலோமீட்டர் தூரத்துக்கும் சோடியம் விளக்குகளை ரஜினி தான் சொந்த செலவில் அமைத்து கொடுத்தார். தொடர்ந்து கிரிவலம் வந்து செல்பவர்.. ஆனால், இப்போதெல்லாம் ரஜினிக்கு பதில் சத்தியநாராயணாதான் வருகிறார்.
எவ வேலு
ஒருவேளை திருவண்ணாமலையில் ரஜினி போட்டியிட்டால், அங்கு திமுகவின் எவ வேலு ஸ்டிராங்காக இருக்கிறார்.. திமுகவின் தவிர்க்க முடியாத சக்தியும் கூட.. எப்படியும் இந்த முறை வேலு, இங்குதான் போட்டியிடுவார்.. அதனால் அவருடன் ரஜினி மோதினால், ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான். இப்படி பல தொகுதிகளின் பெயர்கள் அடிபட்டாலும் திருவண்ணாமலை பெயரே அதிகமாக கேட்க முடிகிறது.. பார்க்கலாம்.. முதலில் கட்சி தொடங்கட்டும்!