ரைட்ல இண்டிகேட்டர் லெஃப்ட்ல டர்ன்.. கடைசி நாளில் நீதிபதிகள் எழுப்பிய பரபர சந்தேகங்கள்! அப்போ முடிவு?
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். நேற்றைய இறுதி நாள் வாதங்கள் & நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால், குறிப்பிட்ட ஒருவரின் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.
ஓபிஎஸ், வைரமுத்து vs எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமைக் கழகம், அதிமுக அவைத்தலைவர், அதிமுக செயற்குழு என நடந்த உச்சகட்ட வாதங்களின்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினர்.
மேலும், அதிமுக கட்சி விதிகளிலேயே தெளிவான புரிதல் இல்லை, இப்படி நீதிமன்றங்களிலேயே வழக்கு நடத்திக் கொண்டிருந்தால் கட்சிப் பணிகளை எப்படி கவனிப்பீர்கள் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இறுதி வரை கட்சி விதிகள் தொடர்பாக இரு தரப்பும் எடுத்து வைத்த வாதங்களில் நீதிபதிகள் திருப்தி அடையவில்லை என்றே தெரிகிறது.
இப்படியே போனா கட்சியை எப்படி நடத்துவீங்க? சட்டென கேட்ட சுப்ரீம் கோர்ட்.. திகைத்த ஓபிஎஸ், ஈபிஎஸ்!
தீர்ப்பு எப்போது?
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தற்போது தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களை 16ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதால், அதன் பிறகே தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. எனினும், இந்த மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துரிதப்படுத்திய நீதிபதிகள்
ஜனவரி 4ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. இந்த வாரமே வழக்கு விசாரணையை முடிக்க விரும்புகிறோம், ஏற்கனவே சொன்ன வாதங்களையே திரும்பத் திரும்பச் சொல்லக்கூடாது, ஷார்ப்பாக வாதங்களை எடுத்து வையுங்கள் என நீதிபதிகள் அவசரப்படுத்தினர். இதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசித்து பரபரவென வாதங்களை எடுத்து வைத்தனர். ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பின் வாதம் முழுமையாகவும் ஈபிஎஸ் தரப்பில் வாதம் பாதியும் நிறைவடைந்த நிலையில், நேற்று, ஈபிஎஸ் தரப்பு, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் அதிமுக கட்சி ஆகிய தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இறுதிக்கட்ட வாதங்கள்
அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று நிறைவடைந்தன. ஓபிஎஸ் முதலில் வைத்த வாதங்களுக்கு பதிலளித்து ஈபிஎஸ் தரப்பு வாதம் வைத்த நிலையில், இறுதியாக, ஈபிஎஸ், அதிமுக அவைத் தலைவர், அதிமுக தலைமைக் கழகம் ஆகியோர் வாதங்களுக்கு எல்லாம் பதில் அளிக்கக்கூடிய வகையில் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு முடிப்பதற்கு முன்பே அனைத்து தரப்பினரும் திங்கட்கிழமைக்குள் (ஜனவரி 16) தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விகள்
தொடர்ந்து வாதம் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் சரியானதுதானா என ஓபிஎஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் தரப்பு கூட்டம் ஓரளவு சரியானது தான் என்றாலும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கையாளப்பட்ட வழிமுறைகள் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து தான் அனைத்து பிரச்சனைகளும் தொடங்கியதா என நீதிபதிகள் கேள்வி எழுப்ப அதற்கு ஆம் என்று ஓபிஎஸ் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
அருமையான வாதம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டனரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என எடப்பாடி தரப்பு பதில் அளித்தது. மேலும், ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் ஆதரவு இல்லை, இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தான் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் அப்போதும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, ஒன்றரைக் கோடி உறுப்பினர்களால் அல்ல என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அருமையான வாதம் என நகைச்சுவையாக குறிப்பிட்டனர்.
அஜெண்டாவே இல்லையே
தொடர்ந்து, ஜூலை 11 பொதுக்குழு பற்றி விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை நீக்குவதாக அஜெண்டாவே இடம்பெறாத நிலையில் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கட்சியின் செயற்குழுவையும், பொதுக்குழுவையும் நடத்த அவைத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவைத் தலைவர் தரப்பு வாதத்திற்குப் பிறகு செயற்குழு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அதிமுக செயற்குழு சார்பில் மூத்த வழக்கறிஞர் அதுல் யஷ்வந்த் சித்லே, ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வாதங்களை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, மீண்டும் ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தது.
இஷ்டத்துக்கு மாற்ற முடியாது
அதிமுகவில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே ஈபிஎஸ் தான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதற்கான உரிய காரணங்களை எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்வைக்கப்படவில்லை என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. மேலும், கட்சி விதிகள் திருத்தத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படாததால் இரட்டைத் தலைமை காலாவதி ஆகிவிட்டதாக அவர்கள் வைக்கும் வாதங்கள் தவறானவை, ஜனநாயகமாக செயல்படும் கட்சியில் இதுபோன்ற பதவிகளை உருவாக்கி அதை ரத்து செய்வது கட்சி விதிக்கே எதிரானது, தேர்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்ட கடிதத்திலும், இரு பதவிகளுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என குறிப்பிடப்படவில்லை என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.
முக்கியமான கேள்விகள்
ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு வரை இருவரும் இணைந்து செயல்பட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதன்பிறகுதான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அப்படித்தானே?
கட்சியின் விதிகளை மாற்றவோ, திருத்தவோ, நீக்கவோ எந்த அமைப்பால் முடியும்?
இருவரும் இணைந்து செயல்பட இயலாத சூழல் வரும்போது என்ன செய்வது?
அதிமுக கட்சி விவகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களிலேயே இருந்தால் கட்சி பணிகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?
இரு தலைமைப் பதவிகளில் ஒரு பதவியில் இருப்பவருக்கு அதில் தொடர விருப்பமில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
ஒரு கேள்வி - அனைத்து தரப்பு பதில்
இருவரும் இணைந்து செயல்பட இயலாத சூழல் வரும்போது என்ன செய்வது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு செயற்குழு தரப்பு, ஒற்றை தலைமை விவகாரத்தை அடிப்படை உறுப்பினர்களை கொண்டு தீர்வு காணலாம் எனத் தெரிவித்தது. கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் உட்கட்சி தேர்தல் நடத்தி தீர்வு காணலாம் என வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அடிப்படை உறுப்பினர்களை கொண்டு தேர்தல் நடத்தலாம் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.
வேறு என்ன செய்யலாம்?
இந்த யோசனைக்கு வேறு ஏதேனும் கருத்துகள் உள்ளனவா? என மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவை இருவரும் சேர்ந்து கூட்டவும், பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் இருந்தால் மீண்டும் வாருங்கள் என்று தனி நீதிபதி தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியது. அதற்கு ஈபிஎஸ் அணி ஆதரவான செயற்குழு தரப்பு, அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தான் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது என தெரிவித்தது.
ஒருவருக்கு வேண்டாம் என்றால்?
இரண்டு பதவிகளில் ஒரு பதவியில் இருப்பவருக்கு அதில் தொடர விருப்பமில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் தரப்பு, இரு பதவிகளுக்கும் மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், கட்சி நலனுக்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர வேண்டும் எனத் தெரிவித்தது. இதையடுத்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
வழக்கின் திசை யாருக்கு சாதகம்?
நேற்றைய இறுதி நாள் விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள், தெரிவித்த கருத்துகள் மூலம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரில் ஒருவருக்கு கட்சியின் உரிமையை வழங்கும் வகையில் தீர்ப்பு வருவதற்கான சாத்தியமில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதனால், பொதுச் செயலாளர் தேர்தலை ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைப்படி உள்ள அடிப்படை உறுப்பினர்கள் மூலம் நடத்தி தீர்வு காணுங்கள் என்றே உத்தரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவை இரு தரப்பும் தீவிரமாக எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.