டென்ஷன் வேண்டாம்.. தமிழகத்தில் "அதிவேக" கொரோனா வேரியண்ட் பாதிப்பு இல்லை: ராதாகிருஷ்ணன் ஆறுதல்
எதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தொற்று பூஜ்யம் என்பதைவிட, இறப்பு பூஜ்யம் என்பதே வெற்றி என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இதுவரை XE வேரியண்ட் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உருமாறிய XE கொரோனா குறித்து கவலை கொள்ள வேண்டாம் எனவும் மக்கள் பதற்றமடையும் சூழல் ஏதும் தற்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்றைய தினம் மாநிலத்தில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. மீண்டும் ஒரு லாக்டவுனை எதிர்கொள்ள வேண்டுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு விளக்கம் அளித்தார்.

கொரோனா தொற்று
சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவப் பணிகள் இயக்கத்தில் தடுப்பு மருந்து சேமிப்பு கிடங்கைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,'தமிழகத்தில் தொற்று பாதிப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது என்றாலும் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம், மாஸ்க் அணிவது அவசியம் என்று கூறினார்.

தடுப்பூசி அவசியம்
தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த வேண்டும். அரசின் கையிருப்பில் 1.56 கோடி தடுப்பூசி உள்ளது. 1.46 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. டெல்லி போன்ற இடங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த நிலைக்கு தமிழ்நாடு செல்லக்கூடாது என்பதற்காக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்.

எதற்கும் தயார் நிலை
ஓமிக்ரான் பரவலின் போது, பாதிப்பு குறைவாக இருந்ததற்கு காரணம் தடுப்பூசி செலுத்தியது, எதற்கும் கவலைப்படாமல் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ராணுவம் போல மருத்துவ துறை செயல்பட வேண்டும். நோய் இல்லை என்பதற்காக தயார் இல்லாமல் இருக்கக் கூடாது. எதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தொற்று பூஜ்யம் என்பதைவிட, இறப்பு பூஜ்யம் என்பதே வெற்றி.

XE கொரோனா வைரஸ்
உருமாறிய XE கொரோனா குறித்து கவலை கொள்ள வேண்டாம். மக்கள் பதற்றமடையும் சூழல் ஏதும் தற்போது இல்லை என்றும் கூறினார். மாஸ்க் கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஒருபோதும் அறிவிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு மாஸ்க் கட்டாயம் இல்லை என்று அறிவித்ததைப் போல ஒரு தவறான புரிதல் இங்கு உள்ளது. அறிகுறி இருக்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications