பெரியார் கடவுள் மறுப்பை பேசினார்.. ஆனால் கடவுள் நம்பிக்கையை அவமதித்ததில்லை.. நடிகர் சிவக்குமார்
கோவை: காலங்கள் செல்ல செல்ல பெரியார் மீது மரியாதை கூடிக் கொண்டே போகிறது என நடிகர் சிவக்குமார் தெரிவித்தார்.
Recommended Video
கோவை மாவட்டம் சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் அண்மையில் தமிழக அரசு விருது பெற்ற செந்தலை கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு. தந்தை பெரியார் கடவுள் மறுப்பை பேசினார்.

கடவுள் நம்பிக்கை
ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் அவமரியாதை செய்தது இல்லை. குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்த போது அவருக்கு இணையாக உட்கார மறுத்தார் பெரியார். ஆதிக்க சக்திகளைதான் அவர் வெறுத்தார். அது போல் பிராமணீயத்தையும் அவர் வெறுத்தார்.

பிராமணர்கள்
ஆனால் பிராமணர்களை அவர் வெறுக்கவில்லை. இன்று ஒடுக்கப்பட்ட மக்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் உள்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் போட்ட விதைத்தான். காலங்கள் கூட கூட பெரியார் மீது மரியாதை கூடிக் கொண்டே செல்கிறது.

விமர்சனம்
அதே வேளையில் அவர் மீது விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன என சிவக்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் விருதுகளை பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். அண்மைக்காலமாக தமிழகத்தையும் திராவிடத்தையும் சீண்டி பார்க்க எதிர்ப்பாளர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் பெரியார்.

பெரியார் மீது விமர்சனம்
பெரியாரை விமர்சனம் செய்வது, அவரது சிலைகளை சிதைப்பது, சிலைகளை அலங்கோலம் செய்வது உள்ளிட்ட செயல்களில் பாஜக ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெரியார் குறித்து எச் ராஜா கண்டனத்துக்குரிய ஒரு ட்வீட்டை போட்டு வசமாக சிக்கினார். அது போல் கடந்த 2019ஆம் ஆண்டு பெரியாரின் நினைவு நாளின் போது 'மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!!' என ஆரம்பித்து தமிழக பாஜக ஒரு அருவருப்பான ட்வீட் போட்டு கண்டனத்துக்குள்ளானது.

தந்தை பெரியார்
தந்தை பெரியார், சமூக சீர்திருத்த தந்தையாக மதிக்கப்படுகிறார். தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவற்றில் அவரது பணி அளப்பரியதாகும். இப்படி இருக்கும் நிலையில் திராவிடத்தை சீண்டுவதற்காக அவ்வப்போது பெரியாரின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் அருவருக்கத்தக்க கருத்துகளை பாஜக பதிவிட்டதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அது போல் இளையராஜாவும் அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு புத்தக முன்னுரை எழுதியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் அம்பேத்கருடன் எப்படி மோடியை ஒப்பிடலாம் என கேட்டு இளையராஜா மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் சிவக்குமார் பெரியார் குறித்து பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications