எஸ்.பி. வேலுமணிக்கு செக் மேட்.. செந்தில்பாலாஜியின் ஆட்டம் ஆரம்பம்.. கோவை பரபர
கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையில் களமிறக்கியுள்ள நிலையில் அவரது செயல்பாடுகளால் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
சட்டமன்ற தேர்தலில் கோட்டைவிட்ட கொங்கு மண்டலத்தை மீட்டெடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகுத்துள்ள வியூகம்தான் இப்போதைய அரசியல் அதிரடி நடவடிக்கையாக உள்ளது. அதிலும் அந்த வியூகத்துக்குள் புகுந்து விளையாட அவர் தேர்வு செய்துள்ளது செந்தில் பாலாஜியை.
சக்கர வியூகத்துக்குள் அபிமன்யு சிக்கிக்கொண்டது மகாபாராதத்தில். ஆனால் முதல்வர் ஸ்டாலின் வகுத்துள்ள இந்த வியூகத்துக்குள் சிக்கப்போவது என்னவோ எஸ்.பி.வேலுமணி தான். அந்த அளவுக்கு இருக்கிறது செந்தில் பாலாஜியின் அதிரடி நடவடிக்கைகள்.

கொங்கு மண்டலத்தில் சரிவு
2021 சட்டமன்ற தேர்தில் தமிழ்நாடு முழுவதும் திமுக அமோகவெற்றி பெற்றாலும், கொங்கு மண்டலத்தில் மண்ணைக் கவ்வியது. அதிலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. கோவையின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஸ்.பி.வேலுமணி. அவரை அசைத்தால்தான் திமுக மீண்டும் கோவையில் தலையெடுக்க முடியும்.அதற்காகத் தான் ஸ்பெசல் கமாண்டோவாக களமிறக்கப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்கெல்லாம் அசந்து போகவில்லை அவர். மீண்டும் திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிவிட்டார். ஆனால் இப்போது செந்தில் பாலாஜியை பார்த்து எஸ்.பி. வேலுமணியே கொஞ்சம் அதிர்ச்சியாகி தான் இருக்கிறார் போல.

பம்பரமாய் சுழலும் செந்தில் பாலாஜி
அந்த அளவுக்கு பம்பரமாய் சுழன்று வேலை பார்த்து வருகிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. கோட்டை விட்ட கொங்கு மண்டலத்தை இரண்டாம் கட்டஉள்ளாட்சித் தேர்தலில் தட்டி தூக்கி விட வேண்டும் என்றுதான் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் உடன்பிறப்புகள். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளின் அதிரடி அரசியலுக்குமுற்றுப்புள்ளி வைக்கவும், பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர் பதவி உள்பட நகராட்சி, பேரூராட்சி ஆகிய மன்றங்களை முழுமையாக கைப்பற்றி கோவை மாவட்டம் முழுவதும் திமுக கொடியை வெற்றிக்கொடியாக பறக்கவைக்கவும் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட பொறுப்பாளர் என்ற பதவியோடு கோவை நகரத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தனது அதிரடி அரசியலை துவக்கி எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறார்.

உடன்பிறப்புகள் உற்சாகம்
பத்தாண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாததால் சோர்ந்து போய் இருக்கும் கோவை மாநகர திமுக நிர்வாகிகள், மாவட்ட உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உற்சாகப்படுத்தி, களப்பணியில் தீவிரமாக பணியாற்றும் வகையில் முடுக்கிவிட்டுள்ளார். கோவை மாவட்ட திமுக பிரமுகர்களுக்கு செலவுவைக்காமல், முதல்வர் மு.க.ஸ்டாலினை கோவைக்கு வரவழைத்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வைத்ததையடுத்து, சோம்பலில் இருந்த கோவை மாவட்ட திமுக,புதுரத்தம் பாய்ச்சப்பட்ட பந்தயக் குதிரை போல, நான்கு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருக்கிறது.

பிரம்மாண்டம் காட்டும் செ.பா.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கிட்டத்தட்ட செந்தில் பாலாஜி ரெடியாக வைத்துள்ளார் என்றே தெரிகிறது. மாநகரம், நகரம், பேரூர் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, ஒவ்வொரு வார்டுக்கும் 20 பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும் என வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை வேலை வாங்கி வருகிறார் செந்தில் பாலாஜி. கொஞ்சம் சோர்ந்து போய் கிடந்தாலும், செந்தில் பாலாஜியை பார்த்து புத்துணர்வு அடைந்து கொண்டிருக்கிறார்கள் கோவை உடன் பிறப்புகள். கடந்த 27 ஆம் தேதி 25ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களை ஒரே இடத்தில் திரட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதிமுகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. சாதாரண தெருமுனைக் கூட்டமாக இருக்கட்டும், முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவாக இருக்கட்டும் பிரம்மாண்டம் காட்டுவது தான் செந்தில்பாலாஜியின் பாணி.

மேயர் தேர்தலுக்கு தயார்
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவியை பிடிப்பது என்பது, தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையேயான மானப்பிரச்னை என்றே பார்க்கப்படுகிறது. ஆளும்கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையேயான போட்டியாக இல்லாமல், இரண்டு முக்கிய தலைகளுக்கு இடையேயான மோதலாக உருவாகி இருப்பதால் இன்றைய நிலையில் கோவை தேர்தல் காய்ச்சல் தமிழகத்தின் ஹாட் டாபிக். உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே வார்டு தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை உடனடியாக அறிவித்துவிடும் அளவுக்கு தேர்தல் பணிகளில் பயங்கர வேகத்தில் இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

திமுகவில் உட்கட்சி பூசல்
கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதி தவிரமற்ற அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும் அதிமுக வசம் இருந்தாலும்கூட அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒட்டுமொத்த கோவை மாவட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெறுவதற்கான வியூகத்தோடு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி காட்டி வரும் தேர்தல் அரசியலைக் கண்டு உண்மையிலேயே எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து தான் போயிருக்கிறார்கள். ஆனால் நான்கு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஒருவேளை முட்டுக் கட்டை விழும் என்றால் அது கோவை மாவட்ட மூத்த திமுக நிர்வாகிகளால் தான் விழும் என்கிறார்கள் சில உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications