‛356’.. ஆட்சியை கலைக்க திட்டம்.. ‛பேட்டை’ ரவுடி அண்ணாமலையை கைது பண்ணுங்க.. மா.கம்யூனிஸ்ட் சாடல்
கோவை: ‛‛356 பிரிவை பிரகடனம்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர திட்டமிடுகின்றனர். ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியவில்லை என்பதால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர். பேட்டை ரவுடியை போல அண்ணாமலை பேசுகின்றார். அவரை கைது செய்ய வேண்டும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஆக்ரோஷமாக கூறினார்.
கோவை பாஜக அலுவலகம் உள்பட பல இடங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனை எதிர்த்து நேற்று கோவையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2014-ல் ஜெ.வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா அதிரடி தீர்ப்பு அளித்த நாள் இன்று!
அண்ணாமலையை கைது பண்ணுங்க
கோவையை பதட்டமான இடமான மாற்றி விடக்கூடாது. கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருக்க ஆர்எஸ்எஸ், பாஜக விரும்பவில்லை. நேற்று கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேணடும். முதல்வரை மிரட்டும் விதமாக அண்ணாமலை பேசுகின்றார். தமிழக காவல் துறையை மிரட்டுகின்றார். பேட்டை ரவுடியை போல அண்ணாமலை பேசுகின்றார்.
ஆட்சியை கலைக்க
356 பிரிவை பிரகடனம்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர திட்டமிடுகின்றனர். ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியவில்லை என்பதால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர். அரசியல் கட்சி தலைவர் என்ற அடிப்படை நாகரிகம் இல்லாத வகையில் அவர் பேசுகின்றார்,. இந்த மாதிரி பேச்சை அனுமதிக்க கூடாது. தமிழக அரசு இது போல பேசுபவர்களை நடமாட அனுமதிக்க கூடாது.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு என்ன வேலை
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை. சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்கள் வரம்புக்கு உட்பட்டு செயல்படுகின்றதா என தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும். காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை , காந்தியை கொன்றதை கொண்டாடியவர்களுக்கு ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்து இருக்கின்றனர். என தெரிவித்தார். அந்தந்த ஊரில் காவல்துறை முடிவு செய்ய வேண்டியதை நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கிறது எனவும் பயங்கரவாத அமைப்பு பின்னாடி நீதிமன்றம் செல்வது வேதனையானது.
கண்களை உறுத்துகிறது
சவுக்கு சங்கர் என்பவரின் கருத்துகளில் உடன்பாடு கிடையாது என்றாலும் நீதிமன்ற அவமதிப்பில் அவருக்கு அதிகபட்சமாக தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் அந்தளவு தண்டணை கொடுத்தது கிடையாது. சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மனித நேய மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2 ம் தேதி நடத்த இருக்கின்றோம். மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது பாஜக , ஆர்எஸ்எஸ் அமைப்புகளுகு கண்களை உறுத்துகின்றது.
உடனே செயல்படுத்தனும்
ஆன்லைன் ரம்மி சட்டத்தினை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர். இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் வன்முறையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்த உள்ளது. பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தெ இருக்கின்றது. இவற்றை மூடி மறைக்க பா.ஜ்கவினர் தொடர்ந்து சச்சரவுகளை கிளப்பி திசை திருப்பி வருகின்றனர்.
உறுதி நடவடிக்கை தேவை
பொது மக்கள் பொருளாதார நடவடிக்கைகள் கவனம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காக இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என தெரிவித்த அவர் இவற்றை எதிர்த்து பிரமாண்டமான போராட்டடம் நடத்த வேண்டி இருக்கின்றது என்றும் தெரிவித்தார். பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல் துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தி திணிக்க முயற்சி
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயல்கின்றனர். மாநிலங்களுக்கு இடையே இந்தி மொழியில் கடித போக்கு வரத்து இருக்க வேண்டும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயும் இந்தி மொழியில் கடித போக்கு வரத்து இருக்க வேண்டும் என்கின்றனர். இந்தியாவின் பெயரை ஹிந்தியா என மாற்ற பார்க்கின்றனர்.
அண்ணாமலை மீது நடவடிக்கை
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காவல் துறை அதிகாரிகளை எச்சரிப்பது, நாட்டையே முடக்குவோம் என சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும். அவர் சாதாரண அரசியல்வாதி இல்லை. ஐபிஎஸ் படித்து விட்டு வந்திருக்கும் நிலையில் வார்த்தைகளின் வீரியம் தெரிந்தே இப்படி பேசுகின்றார். மாநில அரசை, முதல்வரை, காவல் துறையை மிரட்டுவதை எப்படி அனுமதிக்க முடியும். அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்,அவரது பேச்சு வன்முறை வெறியை வெளிப்படுத்தும் விதமாக பேச்சாக இருக்கின்றது.
ஆ ராசா மீது தவறு இல்லை
நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது. ஆ.ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன். அவரது பேச்சை வெட்டி ஒட்டி திரித்து ஒளிபரப்பி இருக்கின்றனர். வர்ணாசிரம தர்மத்தில் சூத்திரனை வேசியின் மகன் என்று சொல்லி இருப்பதை சொன்னார். இதற்கு வர்ணாசிரம தர்மத்தின் மீதுதான் கோவம் இருக்க வேண்டும். ஆனால் அதை எடுத்து சொன்னவர் மீது கோப்பட கூடாது. இறை நம்பிக்கை இருக்கின்றவர்களையும் மனுதர்மம் சூத்திரன் என்றுதான் சொல்கின்றது. ஆ.ராசா சட்டத்திற்கு புறம்பாகவோ, யாரையும் புண்படுத்தும் விதமாகவோ பேசவில்லை எனக்கூறிய அவர், ஆ.ராசாவை மட்டும் குறிவைத்து பா.ஜ.க விமர்சிப்பது சாதிய கண்ணோட்டம் என்றுதான் பார்க்க தோன்றுகின்றது'' என்றார்.