தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது.. வீடியோ வெளியிட்டு சத்குரு சொன்ன அட்வைஸ்
கோவை: "தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி உள்ளார். காற்று மாசு பற்றி கவலைப்படுபவர்கள் 3 நாட்கள் அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள் என்றும் சத்குரு தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நாளையும் வடமாநிலங்களில் ஐந்து நாட்கள் வரையிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு வீட்டில் விளக்குகள் ஏற்றி, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து, பிடித்த உணவுகளை சமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையில் பட்டாசு வெடிப்பது பல்லாண்டு கால நடைமுறையாக உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி உள்ளார்.
வெட்கக்கேடு.. விராட் கோலி 9 மாத கைக் குழந்தைக்கு பாலியல் மிரட்டல்.. பெண்கள் ஆணையம் விசாரணை
பட்டாசுகள்
இது தொடர்பாக சத்குரு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்றுமாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியான நாள்
மேலும், அந்த ட்வீட்டுடன் சேர்த்து சத்குரு வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் சிறுவனாக இருந்த போது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம்.
காற்றுமாசு
ஆனால், இப்போது என்னவென்றால், சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல. யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள்.
வாகனங்கள் வேண்டாம்
வேண்டுமென்றால், பெரியவர்கள் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அவர்களுக்காக, நீங்கள் உங்கள் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
சத்குரு
சத்குரு இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், "அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான காலங்கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள்" என தெரிவித்துள்ளார்.