இலங்கையில் மோசமான கடல்சார் பேரழிவு.. தீ விபத்தால் மூழ்கிய ரசாயன கப்பல்! கடல் உயிரினங்களுக்கு ஆபத்து
கொழும்பு: இலங்கை கண்ட மிக மோசமான கடல் பேரழிவு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆம்.. இந்தியாவிலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு கொழும்பு துறைமுகத்தை நெருங்கிய சிங்கப்பூர் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு அது கடலில் மூழ்கியுள்ளது.
மே 15ம் தேதி, குஜராத்தின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து, 25 டன் நைட்ரிக் அமிலம், ரசாயனங்கள், மற்றும் அழகுசாதனப் பொருள்கள் என மொத்தம் 325 மெட்ரிக் டன் எரிபொருட்களைக் கொண்ட 1,486 கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டது சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV X-Press Pearl) என்ற கப்பல்.
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கே 9.5 கடல் மைல் (18 கி.மீ) தொலைவில் நங்கூரமிட்டு துறைமுகத்திற்குள் நுழையக் காத்திருந்தபோது, திடீரென கப்பலில் தீ பிடித்தது. அந்த மிகப்பெரிய தீ விபத்தால் கப்பல் இன்னும் கொழுந்து விட்டு எரிந்தது. மே இறுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் 12 நாட்கள் கழித்து இப்போது கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது.

இழுக்கும் பணி ஓவர்
இலங்கை நாட்டின் மிக மோசமான கடல் பேரழிவுகளில் ஒன்று இது என்று அந்த நாட்டு அரசும், கடற்படையும் வர்ணிக்கின்றன.
இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இண்டிகா டி சில்வா அல் ஜசீராவுக்கு அளித்துள்ள பேட்டியில், கப்பலின் பின்புற பகுதி மூழ்கிவிட்டதாகவும், எனவே கப்பலை இழுக்கும் பணியை நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

எண்ணை கசிவு ஆபத்து
"கப்பல் இப்போது கடற்பரப்பின் அடிப்பகுதிக்கு போகிறது. இனி இழுக்கும் பணி தொடராது. நீரிலிருந்து அதை வெளியேற்ற முயற்சிப்பதை நாங்கள் நிறுத்திவிட்டோம், "என்று அவர் கூறியுள்ளார்.. "இப்போது எங்கள் கவலை எண்ணெய் கசிவை பற்றிதான். எண்ணை கசிவு பற்றி நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம், இதுவரை எந்தவொரு எண்ணை கசிவும் நடக்கவில்லை. ஒருவேளை அது நடந்தால் பேரழிவாகிவிடும். ஆனால் நாங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். " என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற தடை
கப்பலில் ரசாயனங்கள் கொண்டு செல்லப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கடற்படை கருதுகிறது. இலங்கை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொழும்பில் உள்ள நீதிமன்றம், இந்த கப்பலின் கேப்டன், பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கப்பலின் 25 பேர் கொண்ட குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா, மற்றும் ரஷ்ய நாட்டினர் உள்ளனர். அவர்கள் உயிரோடு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மனிதனால் உருவான பேரழிவு
இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (MEPA) தலைவர் தர்ஷனி லஹந்தபுரா இதை "மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு" என்று குறிப்பிட்டார். "இது இலங்கைக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது பல வழிகளில் நாட்டை எதிர்மறையாக பாதித்துள்ளது. நாம் இப்போது எதிர்மறையான தாக்கத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும், "என்று அவர் கூறினார்.

கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு
இதற்கிடையில், கடற்கரையின் 80 கி.மீ (50 மைல்) நீளத்திற்கு மீன்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது, இதனால் 5,600 மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்ல முடியாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் நீர்கொழும்பு பகுதி சுற்றுலா தளம் மட்டுமன்றி, பெருவாரியான மீனவர்கள் வசிக்கும் பெரிய மீன்பிடி பகுதியாகும். எனவே இந்த தீ விபத்து கடல் வாழ் உயிரினங்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சூயஸ் கால்வாயில் ராட்சத கப்பல் சிக்கி மீண்ட பரபரப்பு ஓய்வதற்குள் உலக நாடுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது இலங்கை கப்பல் விபத்து.












Click it and Unblock the Notifications