அப்பாடா! பெருமூச்சு விட்ட இலங்கை.. ரூ.23,000 கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்!
கொழும்பு: பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் (சுமார் ரூ.23,000 கோடி) கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்துள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. தவறான பொருளாதாரக் கொள்கைகள், கொரோனா ஊரடங்கு, சீனாவிடம் இருந்து வரைமுறையின்றி பெறப்பட்ட பல லட்சம் கோடி கடன் போன்ற காரணங்களால் இலங்கை பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு சரிந்தது. இதனால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், பெட்ரோல் - டீசல் எரிபொருட்கள் ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக, ஏழை - நடுத்தர மக்கள் மூன்று வேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் சூழல் உருவானது.
தொடர் பட்டினி மற்றும் பஞ்சத்தால் கொந்தளித்து போன இலங்கை மக்கள் நாடே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக, இந்தப் போராட்டம் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதிபர் பதவியை கோட்டாபய ராஜபட்சவும், பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்சவும் ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகினர்.
இதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், சர்வேதச நிதியத்திடம் இருந்து 5 பில்லியன் டாலரை (ரூ.40,000 கோடி) கடனுதவியாக வழங்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் முதலில் இதற்கு சர்வதேச நிதியம் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் இலங்கை பிரதிநிதிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் சம்மதித்தது. இதற்கான அறிவிப்பை அது இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிறுபான்மையினரை அடக்கி ஆள முயல்வது நாட்டை பலவீனப்படுத்தும்.. இலங்கை மாஜி அதிபர் சந்திரிக்கா அட்வைஸ்
அதன்படி, இலங்கைக்கு 2.3 பில்லியன் டாலரை, அதாவது ரூ.23 ஆயிரம் கோடியை கடனுதவியாக வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைக்கு வழங்கப்படும் இந்த கடனுதவியின் மூலம் அந்நாட்டு அரசுக்கு கிடைக்கும் வருவாயை பல மடங்கு அதிகரிக்க முடியும். மேலும், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கு புதிய விலையை நிர்ணயிக்கவும் இந்தக் கடனுதவி உதவும். அதுமட்டுமின்றி, இலங்கை மத்திய வங்கி தன்னிச்சையாக இயங்குவதற்கும், இலங்கையின் அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கும் இந்த நிதி வழிவகுக்கும். அதேபோல, தனிநபர் வரியைும், பெரு நிறுவன வரியையும் முறையாக பயன்படுத்தவும் இலங்கைக்கு இந்த நிதி பேருதவியாக இருக்கும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.