கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்.. ஒரு வருடம் சிறையிலேயே இருங்க.. 4 பேர் மீது குண்டாஸ்.. கலெக்டர் அதிரடி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவர் இறந்த நிலையில் வெடித்த கலவரம் தொடர்பாக 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையானது.

கைது நடவடிக்கை
பள்ளிக்குள் நுழைந்தவர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்தனர். மேலும் சான்றிழழ்களை சூறையாடினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரித்து கலவரம் தொடர்பாக ஏராளமானவர்களை கைது செய்தனர். மொத்தம் 300க்கும் அதிகமானவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். இவர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டம்
இதற்கிடையே மாணவர்கள் உள்பட பலருக்கும் படிப்பை காரணம் காட்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேநேரத்தில் கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இன்று 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

4 பேர் மீது பாய்ந்த வழக்கு
அதன்படி கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட க.மாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜாபர்அலி , சின்னசேலத்தை சேர்ந்த விஜய் , எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் , பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேல் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட எஸ் பி பகலவன் பரிந்துரைத்தார். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எவ்வளவு பேர்?
கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்த நிலையில் இன்று 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் தடுப்பு சட்டத்தின்படி கைதான நபருக்கு ஒரு ஆண்டு வரை ஜாமின் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புனரமைப்பு பணி
முன்னதாக மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவின்பேரில் கலெ க்டர் அறிவுரைப்படி பள்ளி திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications