இலவச வேக்சின், சென்ட்ரல் விஸ்டா ரத்து.. பிரதமர் மோடிக்கு 12 எதிர்க்கட்சிகள் கடிதம்.. 9 ஆலோசனைகள்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதை தொடர்ந்து 12 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. பிரதமர் மோடிக்கு 9 விதமான ஆலோசனைகளை வழங்கி கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கேஸ்கள் 4 லட்சத்தில் இருந்து 3.20 லட்சமாக குறைந்தாலும் கூட இனிதான் உண்மையான உச்சம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசு இதில் பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எதுவும் பெரிதாக பேசவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அமைதி காத்து வருகிறார்.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக 12 எதிர்க்கட்சிகள் சார்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எச்.டி.தேவெ கௌடா, சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பலமுறை மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தனியாகவும், கூட்டாகவும் ஆலோசனை வழங்கி உள்ளன. ஆனால் இதை எல்லாம் ஆளும் கட்சி கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் மிகப்பெரிய மனித குல அவலத்தை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் எதையும் மத்திய அரசு கேட்கவில்லை.
இந்தியாவை மிகப்பெரிய அவலத்திற்கு மத்திய அரசு கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் உடனே கொரோனா பரவலை கட்டுப்படுத்தி நிலையை சரி செய்ய மத்திய அரசு பின்வரும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகள்,
* சர்வதேச அளவிலும், இந்தியாவிற்குள்ளும் இருக்கும் வேக்சின்களை எல்லாம் மத்திய அரசு வாங்க வேண்டும்.
* உடனே மக்களுக்கு இலவசமாக, பாகுபாடு இன்றி எல்லோருக்கும் வேக்சின் கொடுக்க வேண்டும்.
* இந்தியாவில் வேக்சின் உற்பத்தியை மேற்கொள்ள கட்டாய லைசன்ஸ் என்ற விதியை கொண்டு வர வேண்டும்.
* பட்ஜெட்டில் வேக்சினுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.
* மத்திய அரசின் புதிய நாடாளுமன்ற திட்டமான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்திவிட்டு அந்த பணத்தை வேக்சின் மற்றும் ஆக்சிஜன் வாங்க பயன்படுத்த வேண்டும்.
* "கணக்கிடப்படாத தனியார் அறக்கட்டளை நிதியமில்" இருக்கும் அனைத்து பணத்தையும் விடுவிக்க வேண்டும், பிஎம் கேர் நிதி மூலம் தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும்.
* வேலை இல்லாத எல்லோருக்கும் மாதம் ரூபாய் 6000 வழங்க வேண்டும்.
* ஏழைகளுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்.
*கோவிட் காலத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
என்று பிரதமர் மோடிக்கு 12 எதிர்க்கட்சிகள் எழுதி உள்ள கடித்ததில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications