ஊழல், வாரிசு அரசியல்,கூட்டுறவு கூட்டாட்சி, 5ஜி - பிரதமர் மோடியின் சுதந்திர தின டாக் டாப் 'டார்கெட்'
டெல்லி: நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி ஊழல், வாரிசு அரசியல், கூட்டுறவு கூட்டாட்சி, 5ஜி சகாப்தம் ஆகியவை தொடர்பாக குறிப்பிட்டு பேசினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரை: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த முக்கியமான தருணத்தில் எனது அன்பான நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல! இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் மட்டுமல்ல, தங்கள் நாட்டை பெரிதும் நேசிக்கும் இந்தியர்களால் உலகெங்கும் நமது மூவர்ணக் கொடி பெருமை, மரியாதை மற்றும் புகழுடன் பறக்கவிடப்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசத்திற்கான கடமை ஆற்றுவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பாபுஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் ஆகியோருக்கு இந்த நாட்டில் உள்ள நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். நாட்டிற்கான கடமையே அவர்களின் வாழ்க்கைப் பாதையாக இருந்து இருக்கிறது.
மங்கள் பாண்டே, தாந்தியா தோபே, பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஷ்பக் உல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது. ராணி லட்சுமிபாய், ஜல்காரி பாய், துர்கா பாபி, ராணி கைதின்லியு, ராணி சென்னம்மா, பேகம் ஹஸ்ரத் மஹால், வேலு நாச்சியார் என இந்தியாவின் பெண் சக்தியை வெளிப்படுத்திய நமது வீரப் பெண்களுக்கு இந்த தேசம் நன்றிக்கடன் பட்டுள்ளது.
சுதந்திரப் போரில் ஈடுபட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டைக் கட்டமைக்க பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேரு, சர்தார் வல்லபாய் படேல், ஷ்யாம பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, தீன்தயாள் உபாத்யாயா, ஜெய் பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, ஆச்சார்யா வினோபா பாவே, நானாஜி, தேஷ்முக், சுப்ரமணிய பாரதி போன்ற எண்ணற்ற மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது.
இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தை வந்தடைந்தது சீன உளவு கப்பல் யுவான் வாங் 5
ஊழல்வாதிகள்
ஊழலுக்கு எதிராக முழு வலிமையுடன் போராட வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளில், தவறானவர்களின் கைகளுக்குச் செல்லும் இரண்டு லட்சம் கோடி ரூபாயை, நேரடிப் பணப் பரிமாற்றம், ஆதார், மொபைல் என அனைத்து நவீன முறைகளையும் பயன்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வெற்றி பெற்றுள்ளோம். ஊழல்வாதிகள் நாட்டை கரையான் போல் தின்று கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக போராடி, போராட்டத்தை தீவிரப்படுத்தி, தீர்க்கமான கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே, எனது 130 கோடி நாட்டு மக்களே, தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து ஆதரவளிக்கவும்! இன்று நான் இந்தப் போரில் ஈடுபட உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற வந்துள்ளேன். இந்தப் போரில் நாடு வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், சிலர் அவர்களைப் புகழ்வதற்காகக் கீழ்த்தரமாகச் செயல்படுவது உண்மையிலேயே ஒரு சோகமான நிலைதான். எனவே, சமூகத்தில் ஊழல்வாதிகள் மீது வெறுப்பு உணர்வு ஏற்படும் வரை, இதுபோன்ற மனநிலை முடிவுக்கு வரப்போவதில்லை.
வாரிசு அரசியல் நோய்
நான் வாரிசுகளை ஆதரிக்கும் போக்குப் பற்றி பேசும்போது, அரசியல் வாரிசுகளை பற்றி மட்டுமே பேசுகிறேன் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் இந்த வாரிசுகளை ஆதரித்தல் எனும் கொடிய நோய் நாட்டின் அனைத்து நிறுவனங்களிலும் பரவியுள்ளது, திறமை மற்றும் வாய்ப்புகளில் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இந்திய அரசியலமைப்பின் உண்மையான உணர்வில், இந்திய அரசியலையும் நாட்டின் அனைத்து உள்ளுணர்வையும் தூய்மைப்படுத்துவதற்கான அச்சுறுத்தலை வேரறுக்க மூவர்ணக் கொடியின் கீழ் உறுதிமொழி எடுக்குமாறு நாட்டு மக்களை செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டுறவு கூட்டாட்சி
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி, தலைமை தாங்கி, பல துறைகளில் முன்னுதாரணமாக உழைத்த பல மாநிலங்கள் நம் நாட்டில் உள்ளன. இது நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனால் இன்றைய காலத்தின் தேவை, நமக்கு கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் போட்டியுடனான கூட்டுறவு கூட்டாட்சி தேவைப்படுகிறது. வளர்ச்சிக்கு போட்டி தேவை.
5ஜி சகாப்தத்தில் இந்தியா
5ஜி சகாப்தத்தில் நுழைய தயாராக இருக்கிறோம். உலகளாவிய வளர்ச்சி படியை எட்டிப்பிடிக்க நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ஆப்டிகல் ஃபைபர் ஒவ்வொரு கிராமத்திலும் கடைசி மைல் வரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம். டிஜிட்டல் இந்தியாவின் கனவு கிராமப்புற இந்தியா மூலம் எட்டப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கிராமங்களில் அந்த கிராமத்தின் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் நான்கு லட்சம் பொது சேவை மையங்கள் உருவாக்கப்படுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். செமிகண்டக்டர்களை உருவாக்குதல், 5G சகாப்தத்தில் நுழைதல், ஆப்டிகல் ஃபைபர்களின் விரிவாக்கம் கொண்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், நம்மை நவீனமாகவும், வளர்ந்ததாகவும் நிலைநிறுத்துவதற்காக மட்டுமல்ல. கல்விச் சூழல் அமைப்பில் முழுமையான மாற்றம், சுகாதார உள்கட்டமைப்பில் புரட்சி மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.