பெண்ணுடன் நட்புடன் பழகிய டெல்லி பல்கலை மாணவரை...அடித்துக் கொன்ற 5 பேர் கைது!!
டெல்லி: வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பு வைத்து இருந்த காரணத்திற்காக டெல்லி பல்கலைக் கழக மாணவரை கொன்ற குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ராகுல் ராஜ்புத். இவர் மாணவர்களுக்கு டியூசனும் எடுத்து வந்துள்ளார். வடமேற்கு டெல்லியில் ஆதர்ஷ் நகரைச் சேர்ந்தவர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கொலை செய்யப்பட்ட இளைஞர் அவரது பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்புணர்வுடன் பழகி வந்துள்ளார். இருவரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த புதன்கிழமை மாலை அந்த இளைஞருடன் அந்தப் பெண்ணின் உறவினர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து நந்தா ரோடு பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அந்தப் பகுதிக்கு வந்த ராகுலை அங்கு இருந்த ஐந்து பேர் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அந்தப் பெண்ணின் சகோதரும் அடங்குவார். அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பார்க்கும்போது, அடிவாங்கும் அந்த இளைஞரை காப்பாற்றுவதற்கு அந்தப் பெண் முயற்சிப்பது பதிவாகி இருக்கிறது'' என்று தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர் கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞரும் அந்தப் பெண்ணும் நட்புணர்வுடன் பழகி வந்தனர். ஒரே இடத்தில்தான் இருவரும் வசித்து வருகின்றனர். ஆனால், இவர்களது நட்புக்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எனக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும்போது, கடுமையாக எங்களது உறவின இளைஞரை தாக்கி இருப்பது தெரிய வந்தது'' என்றார்.
நாட்டியே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வழக்கு... சிபிஐ ஏற்றது!!
பலத்த காயங்களுடன் வீட்டுக்கு சென்ற ராகுல் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து, கடுமையான உடல் வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வடமேற்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் விஜயேந்திர ஆர்யா கூறுகையில், ''கண்ணுக்கு தெரியும்படி எந்தக் காயங்களும் இல்லை. ஆனால், அவரது மண்ணீரல் சிதைந்து இறந்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டில் மிட் ராஜ், மன்வர் ஹூசைன் மற்றும் மூன்று மைனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த சம்பவத்தை வகுப்புவாத வன்முறையாக மாற்ற வேண்டாம் என்று ராகுலின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். இறந்த ராகுலின் குடும்பத்துக்கு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் நீதி பெற்றுத் தரப்படும் என்று சிசோடியா தெரிவித்துள்ளார். இதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கிட் சாக்சேனா என்பவர் கொல்லப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.