சொகுசு கப்பல் போதை வழக்கு.. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மட்டும் தப்பியது எப்படி? 5 முக்கிய காரணங்கள்
டெல்லி: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு எதிரான போதைப் பொருள் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு அக். 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதைக் கண்டறிந்த என்சிபி அதிகாரிகள், இது தொடர்பாக நடத்திய அதிரடி சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானை கப்பலில் வைத்தே போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். முதலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
ராமேஸ்வரம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை..
மும்பை உயர் நீதிமன்றம்
அவர் ஜாமீன் கோரி முதலில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் உள்ளதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றம் அக். 28ஆம் தேதி ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது.
மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டு
இந்த வழக்கில் சுமார் 22 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான் அதன் பின்னரே ஜாமீனில் விடுதலையானார். ஆர்யன் கானை சொகுசு கப்பலில் என்சிபி அதிகாரிகள் கைது செய்த போது அவரிடம் எந்தவொரு போதைப் பொருளும் இல்லை என்பதைக் குறிப்பிட்டே மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இது வழக்கு பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த போது, என்சிபி அதிகாரிகள் சிலர் ஆர்யன் கானை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப் பணம் கேட்டு மிரட்டியதாகத் தகவல் வெளியானது.
ஆர்யன் கான் பெயர் இல்லை
இப்படி சினிமாயை மிஞ்சும் அளவுக்கு பல்வேறு ட்விஸ்ட்களுக்கு மத்தியில் வகையில் தான் இந்த விசாரணை நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் இன்று என்சிபி தரப்பில் சுமார் 6,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ததது. அதில் மொத்தம் 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், இந்த வழக்கு தலைப்பு செய்திகளில் இடம் பெற காரணமாக இருந்த ஆர்யன் கான் பெயர் இதில் இடம் பெறவில்லை. இதன் மூலம் ஆர்யன் கானுக்கு இந்த வழக்கிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.
வீடியோ இல்லை
ஆர்யன் கானின் பெயர் இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆக மொத்தம் 5 முக்கிய காரணங்கள் உள்ளன.
1 முதலில் கப்பலில் ரேவ் பார்ட்டி நடைபெறும் போது, என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையின் வீடியோ பதிவு எதுவும் இல்லை
2 ஆர்யன் கானின் மொபைல் கைப்பற்றப்பட்டதில் குளறுபடிகள் இருந்தன. அதில் விதிமீறல்கள் இருந்துள்ளன. மேலும், அதில் இருந்த சாட்களுக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இருந்து இருக்கவில்லை.
பிறழ் சாட்சி
3 ஆர்யன் கான் போதைப் பொருளை எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை நிரூபிக்க அவரிடம் எவ்வித மருத்துவ சோதனையும் நடத்தப்படவில்லை.
4 என்சிபி தரப்பின் ஒரு சாட்சி பிறழ் சாட்சியாக மாறி, தன்னிடம் அதிகாரிகள் வெற்று காகிதங்களில் கையொப்பம் வாங்கியதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு (SIT) தெரிவித்தார். மேலும், இரு சாட்சியங்கள் இந்த சோதனை நடந்த இடத்திலேயே இல்லை என்று தெரிவித்தனர்.
போதைப் பொருள் இல்லை
5 எல்லாவற்றையும் விட ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இந்த வழக்கில் ஒன்றாக இணைக்கப்பட்டனர். அனைவருக்கும் எதிராக ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அடுத்து என்ன
போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கான் விடுதலை ஆக இவை முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆர்யன் கான் விடுதலை செய்யப்பட்டாலும் கூட, குற்றப்பத்திரிகையில் மொத்தம் 14 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அவர்கள் மீதான விசாரணை எப்படி முடியப் போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்!