மொத்த சுமையும் எங்களுக்கு தான்! பெட்ரோல், டீசல் வரி குறைப்பு குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி குறைப்பின் மொத்த சுமையும் மத்திய அரசுக்கு தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புள்ளிவிவரங்களோடு விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த துவங்கின.
இதனால் பெட்ரோல், டீசல் விலை ரூ.100யை கடந்தது. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில் வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
மொத்த சுமையும் எங்களுக்கு தான்.. பெட்ரோல், டீசல் வரி குறைப்பு பற்றி நிர்மலா சீதாராமன் விளக்கம்
மத்திய அரசு விலை குறைப்பு
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான் காரணம் என மக்கள் கூறினர். இந்நிலையில் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் மீதான வரியை ரூ.10ம் குறைத்தது. மேலும் மாநில அரசுகளும் உள்ளூர் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் வரிகள் குறைக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தன. அதன்பிறகு ஐந்து மாநில தேர்தலுக்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது.
2வது முறையாக குறைப்பு
இந்த நிலையில் மத்திய அரசு நேற்று அதிரடியாக 2வது முறையாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.8, டீசல் மீது லிட்டருக்கு ரூ.6 என கலால்வரி குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறைந்துள்ளது. இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். மேலும், ஏழைப்பெண்களுக்கான 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழான சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு பொதுமக்களை ஏமாற்றுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுபற்றி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ராகுல்காந்த, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கடுமையாக தாக்கி பேசினர். மேலும், செஸ் வரியை குறைக்காமல் மாநிலங்கள் பங்கீட்டு கொள்ளும் கலால்வரியை குறைத்துள்ளது. இதனால் ஏற்படும் இழப்பு மாநிலங்களுக்கும் சேரும் என அவர்கள் தெரிவித்தனர்.
நிர்மலா சீதாரமன் விளக்கம்
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளாதாவது: பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை குறைக்க கூறினார். இதையடுத்து வரி குறைப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இதுபற்றி விமர்சனங்களும், மதிப்பீடுகளும் எழுந்துள்ளன. இதுபற்றி சில உண்மைகளை பகிர்கிறேன். அடிப்படை கலால் வரி (BED), சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED), சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் (RIC) மற்றும் வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் (AIDC) ஆகியவை இணைந்தது தான் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உருவாக்குகின்றன.
எதில் வரி குறைப்பு?
இதில் அடிப்படை கலால்வரி மட்டும் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடியது. மற்ற 3 வரிகளும் மாநிலங்களுடன் பகிர முடியாதவையாகும். தற்போது பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.8, மற்றும் டீசல் மீது ரூ.6 கலால்வரி குறைப்பு என்பதுமுற்றிலுமாக சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ்ஸில் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடைசியாக நவம்பர் 2021ல் கலால் வரி குறைப்பின் மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் லிட்டருக்கு 10 குறைக்கப்பட்டது. இதுவும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ்ஸில் தான் செய்யப்பட்டது.
மொத்த சுமையும் எங்களுக்கு தான்
இதன்மூலம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால்வரியில் கை வைக்கப்படவில்லை. மத்திய அரசு மேற்கொண்ட இந்த 2 கலால் வரிக்குறைப்புகளின் முழுச்சுமையும் மத்திய அரசால் தான் ஏற்கப்படுகிறது. நேற்றைய வரி குறைப்பு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் இழப்பு ஏற்படும். நவம்பர் மாதம் செய்யப்பட்ட வரி குறைப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் இழப்பு ஏற்படும். அதன்படி பார்த்தால் வரிகுறைப்பால் ஆண்டுக்கு மத்திய அரசுக்கு ரூ.2.20 லட்சம் வருவாய் பற்றாக்குறை ஏற்படும்.
மானியத்தில் யார் அதிகம்?
மேலும் ஆர்பிஐ டேட்டாவின் படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014 முதல் 2022 வரை மொத்தம் 90.9 கோடி ரூபாயை பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு செலவிட்டுள்ளது. ஆனால் 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.49.2 ட்சம் கோடியை மட்டுமே செய்துள்ளது. கடந்த 8 ஆண்டு ஆட்சியில் பிரதமர் மோடியின் மத்திய அரசு உணவு, எரிபொருள் மற்றும் உர மானியங்களுக்காக ரூ.24.85 லட்சம் கோடியும், மூலதன உருவாக்கத்துக்காக ரூ.26.3 லட்சம் கோடியும் வழங்கியுள்ளது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியில் உணவு, எரிபொருள், உர மானியங்களுக்காக வெறும் ரூ.13.9 லட்சம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது'' என புள்ளிவிவரங்களோடு பதிவிட்டுள்ளார்.